ADDED : செப் 20, 2024 05:55 AM
திருப்பூர்: 'பேரூராட்சியில் இரு தவணைகளில் சொத்து வரி செலுத்தாத பட்சத்தில், ஒரு சதவீதம் வட்டி விதிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியில் வரி வசூல் பணியில், நிர்வாகங்கள் வேகம் காட்டி வருகின்றன.
பொதுமக்கள் பெரும்பாலும் நடப்பாண்டு இறுதியில் தான் வரி செலுத்துவது வழக்கம். இந்நிலையில், இரு தவணைகளில் வரி தொகை செலுத்தி முடிக்க வேண்டும் என, உள்ளாட்சி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
பேரூராட்சிகளின் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:அந்தந்த அரையாண்டுக்கான சொத்து வரி அதே அரையாண்டுக்குள், அதாவது, முதல் அரையாண்டு கேட்புத் தொகை, செப்., மாதத்திற்குள்ளும், இரண்டாம் அரையாண்டு தொகை, மார்ச் மாதத்திற்குள்ளும் செலுத்தப்படாத நிலையில், ஒரு சதவீதம் மாதாந்திர வட்டி விதிக்கப்படும்.
தற்போது, 2024-2025 முதல் அரையாண்டு இறுதி என்பதால், இம்மாத இறுதிக்குள் முதல் அரையாண்டு கேட்பு தொகையை செலுத்த வேண்டும். அக்டோபர் மாதத்திற்குள், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரி கேட்பினை செலுத்தி, 5 சதவீதம் ஊக்கத் தொகை சலுகையை பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.