/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழிக்காட்டு தோட்டத்தில் இனி, பசுமை செழிக்கும்!
/
குழிக்காட்டு தோட்டத்தில் இனி, பசுமை செழிக்கும்!
ADDED : செப் 23, 2024 11:39 PM

திருப்பூர் : 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், வலைய பாளையம் குழிக்காட்டு தோட்டத்தில், 1,600 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.
வெற்றி அறக்கட்டளை சார்பில், திருப்பூர் மாவட்டத்தின் பசுமை பரப்பை விரிவாக்கம் செய்யும், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தண்ணீர் வசதியுள்ள நிலங்களில், பாதுகாப்பு வேலி அமைத்து, மரக்கன்று நட்டு வளர்க்க ஊக்குவிக்கப்படுகிறது.
விவசாயிகள், மானாவாரி விவசாய நிலங்களில் கூட, மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புகின்றனர். பதிவு செய்துள்ள நிலத்தை ஆய்வு செய்து, மண் மாதிரி பகுப்பாய்வு செய்து, அதற்கு ஏற்ற மரக்கன்றுகள் நட்டு வளர்க்க, ஆய்வுக்குழுவினர் பரிந்துரைக்கின்றனர்.
அதன்பின், களப்பணி குழு களமிறங்குகிறது. சரியான இடைவெளியில் குழி எடுத்து, மரக்கன்று நட்டு கொடுக்கின்றனர். அதற்கு பிறகு, தண்ணீர் விட்டு பராமரிக்கும் விவசாயிகள், கைமேல் பலனை அனுபவித்து வருகின்றனர்.
இந்தாண்டு, மூன்று லட்சம் இலக்குடன் துவங்கிய பயணம், வேகமாக சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி, மரக்கன்றுகள் நட்டு முடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் அடுத்துள்ள வலையபாளையத்தில், நேற்று மரக்கன்று நடப்பட்டது.
அங்குள்ள குழிக்காட்டு தோட்டத்தில், மகோகனி - 1000, தேக்கு - 600 என, 1,600 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. இதில், தோட்ட உரிமையாளர்கள் சுபாஷினி, நாகேந்திரன் ஆகியோர், மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர்.
மரக்கன்றுகளை இலவசமாக நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.