UPDATED : ஜூலை 21, 2026 06:39 PM
ADDED : ஜூலை 21, 2026 06:32 PM
கணியாம்பூண்டி:அவிநாசி ஒன்றியம் கனியாம்பூண்டி ஊராட்சி, அப்பல்லோ நகரில், அடிப்படை வசதிகள் இல்லாத அவலம் நிலவுகிறது.
இது குறித்து, அப்பகுதியில் வசிப்போர் கூறியதாவது:
இப்பகுதி உருவாகி, 15 ஆண்டுகள் ஆகிறது. அனைத்து வரியினங்களையும் செலுத்துகிறோம். ஆனால், எவ்விதமான அடிப்படை வசதியும் இல்லை. குடிநீர் மற்றும் உப்புத் தண்ணீர் பணம் கொடுத்து வாங்குகிறோம். ரோடு வசதி இல்லாததால், மழை நேரங்களில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாகிவிடுகிறது. நடந்து கூட செல்ல முடியாது.
உப்புத்தண்ணீர் பயன்பாட்டுக்காக, 15 ஆண்டுக்கு முன் குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. அது தரம் இல்லாததால், தொட்டி பயனற்ற நிலையில் உள்ளது.அடிப்படை வசதிகள் கோரி ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தில் பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. எனவே, எங்கள் பகுதிக்கான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து ஊராட்சி செயலர் மகேஷ்குமார் கூறியதாவது:
அப்பல்லோ நகருக்கு குடிநீர் கொண்டு செல்லும் பாதையில் ரயில்வே பாதை உள்ளது. ரயில்வே நிர்வாகம் அனுமதி தர மறுத்து விட்டது. அருகில் தனியார் இடம் உள்ளது. அதன் வழியாக கொண்டு செல்ல பேசி வருகிறோம். மாநகராட்சி குடிநீர் சப்ளை கேட்கின்றனர். அதற்கு கலெக்டர் தான் முடிவு செய்ய வேண்டும். விரைவில் ரோடு போட்டு கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
