
உ லகில், யாரோடும், எந்தவொரு உறவோடும் ஒப்பிட முடியாத ஒரே உறவு தாய். தாயின் பாசம், அரவணைப்பை அளவிடவோ, அதற்கென ஒரு எல்லைக்கோடு வரையவோ முடியாது. நலமிக்க, ஒழுக்கம் நிறைந்த ஒரு தலைமுறையை உருவாக்கும் உன்னத படைப்பு தாய் என்பதை மறுப்பதற்கில்லை.
ஒரு மகனோ, மகளோ தன் தாய்க்கு செலுத்தும் மரியாதை, அன்பு என்பது, விலைமதிப்பற்றது. ஓடி, ஓடி உழைத்து, களைத்து, தடுமாறும் வயதில், பெற்றெடுத்து வளர்த்த பிள்ளைகளின் அன்பு, அரவணைப்பில் வாழும் போது, தாயும், தந்தையும் பெறும் மகிழ்ச்சி தான், அவர்களது பிறவிப்பயன்.
அந்தளவு தாயின் முக்கியத்துவம், மகத்துவத்துக்கு இணையாக மரக்கன்று வளர்த்தெடுக்கும் அறிவிப்பை செயல்படுத்தி வருகிறது மத்திய அரசு. ஒரு நாட்டின் வன வளம் என்பது, 33 சதவீதம் இருந்தால் தான் மழை வளம் சிறக்கும். நம் நாட்டில், 25.17 சதவீதம் தான் வனவளம் இருப்பதாக புள்ளிவிபரம் கூறுகிறது.
எனவே வன வளம், மழை வளம் பெருக்க, கடந்த சுற்றுச்சூழல் தினத்தன்று, 'தாயின் பெயரில் ஒரு மரம்' என்ற இயக்கத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி.
பொதுமக்கள், பள்ளி கல்லுாரி மாணவ, மாணவியர், தன்னார்வ அமைப்பினர் என, பலரும் தங்கள் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நட்டு, அதற்கான மத்திய அரசின் செயலியில், புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
திருப்பூர் ஏ.கே.என்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினரும், பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் மரக்கன்று நட்டு வளர்க்க ஊக்குவிப்பு வழங்கி வருகின்றனர். அந்த புகைப்படத்தை எடுத்து, http://ecoclubs.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றும் செய்யுமாறு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.