/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புத்தாண்டு தினம்; கோவில்களில் சிறப்பு வழிபாடு
/
புத்தாண்டு தினம்; கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 02, 2026 05:47 AM

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது.
பொள்ளாச்சி அருகே சூலக்கல் மாரியம்மன் கோவிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு நடந்தது. தொடர்ந்து, சிவபெருமான் தங்க கவச அலங்காரத்திலும்; விசாலாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று, விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரரை வழிபட்டனர்.
பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில், மாகாளியம்மன் கோவில், கடைவீதி பாலகணபதி கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று காலை, 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் தேவியருடன் அருள்பாலித்தார். பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
இதே போல், வால்பாறை அண்ணாநகர் மாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன்கோவில், வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி கோவில், காமாட்சியம்மன்கோவில், கருமலை பாலாஜிகோவில், சோலையார் சித்திவிநாயகர் கோவில்களில், புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
* கிணத்துக்கடவு சிவலோக நாயகி உடனமர் சிவலோகநாதர் கோவில், பொன்மலை வேலாயுத சுவாமி கோவில், முத்துமலை முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், புத்தாண்டில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கவும், விவசாயம் செழிக்கவும், பருவமழை பெய்யவும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
இதில், சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. இதில், பக்தர்கள் பங்கேற்று விளக்கு ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
உடுமலை உடுமலை பகுதிகளில், ஆங்கில புத்தாண்டு தினம், நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு, புத்தாண்டை வரவேற்கும் வகையில் வானில் வர்ண ஜாலம் காட்டிய பட்டாசுகள் வெடித்தும், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டும், மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். நேற்று அதிகாலை, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், பால், தயிர், பன்னீர், இளநீர் என சுவாமிக்கு பல்வேறு திரவியங்களில் அபிேஷகம் நடந்தது.சந்தனக்காப்பு அலங்காரத்தில், விநாயகப்பெருமான் அருள்பாலித்தார்.
உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. தங்கக்கவச அலங்காரத்தில், வேங்கடேச பெருமாள் அருள்பாலித்தார்.
குறிஞ்சேரி ஆண்டாள் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். அதே போல், தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவில், ருத்ரப்ப நகர் சித்தி விநாயகர், தில்லை நகர், சீரடி சாய்பாபா கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியிலுள்ள கோவில்களில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன.
திருமூர்த்திமலை சுற்றுலா மற்றும் ஆன்மிக மையமான திருமூர்த்தி மலை அடிவாரத்தில் தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. மும்மூர்த்திகளும், சுப்ரமணியர், விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மலைமேலுள்ள பஞ்சலிங்க அருவியில், சுற்றுலா பயணியர் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்
- நிருபர் குழு -: .

