/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழப்பமும் வேண்டாம்; பயமும் தேவையில்லை: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் ஜரூர்
/
குழப்பமும் வேண்டாம்; பயமும் தேவையில்லை: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் ஜரூர்
குழப்பமும் வேண்டாம்; பயமும் தேவையில்லை: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் ஜரூர்
குழப்பமும் வேண்டாம்; பயமும் தேவையில்லை: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் ஜரூர்
ADDED : நவ 09, 2025 11:49 PM
திருப்பூர்: 'மாவட்டம் முழுவதும் தீவிர திருத்த பணிகள் திறம்பட நடைபெற்றுவருகின்றன; அரசியல் கட்சியினரோ, வாக்காளரோ பயப்பட தேவையில்லை' என்கின்றனர் தேர்தல் பிரிவு அதிகாரிகள்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள், தமிழகம் முழுவதம் கடந்த 4ம் தேதி முதல் நடைபெற்றுவருகின்றன. திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 வாக்காளர் உள்ளனர். இவர்களுக்கான தீவிர திருத்த படிவத்தை, ஓட்டச்சாவடி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள 2,536 பி.எல்.ஓ.,க்கள், வீடு தேடிச் சென்று வழங்கிவருகின்றனர்.
மாவட்டத்தில், வாக்காளர்களுக்கு வழங்க போதுமான திருத்த படிவங்கள் இல்லை; பி.எல்.ஓ.,க்கள் முறையாக வீடு தேடிச் செல்வதில்லை. தீவிர திருத்தம் தொடர்பாக வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. முகவரி மாற்றம் மற்றும் முகவரி முரண்பாடுகளால் குழப்பங்கள் ஏற்படுகின்றன என தீவிர திருத்தம் தொடர்பாக, சில குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
படிவங்கள் தயார்
மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது:
பட்டியலில் பெயர் உள்ள வாக்காளர்களுக்கான தீவிர திருத்த படிவங்களை, தேர்தல் கமிஷன் பி.டி.எப்., ஆக அனுப்பியுள்ளது. அவற்றை அச்சிட்டு, சரிபார்த்து, அந்தந்த சட்டசபை தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் வாயிலாக, பி.எல்.ஓ.,க்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. அனைத்து வாக்காளர்களுக்கான படிவங்களும், தயாராக உள்ளன.
கடந்த அக். 27 ம் தேதி நிலவரப்படியான வாக்காளர் பட்டியலில் உள்ள முகவரிக்கு, பி.எல்.ஓ.,க்கள் தீவிர திருத்த படிவங்களை கொண்டுவருவர். திருப்பூரில் பெரும்பாலானோர், வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். வேறு முகவரி மாறிய வாக்காளர்கள், அருகாமை வீட்டாரிடம் தகவல் தெரிவிக்கலாம் அல்லது தாங்கள் பி.எல்.ஓ.,க்களை தொடர்பு கொண்டு, படிவங்களை பெறலாம்.
தொடர்பு எண்
Voter Helpline என்கிற மொபைல் செயலியில், Know Your Ero, Blo என்பதை தேர்வு செய்து, வாக்காளர் அட்டை எண்ணை கொடுத்தாலே போதும், பி.எல்.ஓ., வின் பெயர் மற்றும் தொடர்பு எண் கிடைக்கும்.
அனைத்து பி.எல்.ஓ.,க்களையும் கட்டாயம் வீடு தேடிச்சென்று, வாக்காளரிடம் படிவங்கள் வழங்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். சில இடங்களில், பி.எல்.ஓ., வருகையை பார்த்து, ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கூடி, தங்கள் படிவங்களை கேட்டுப்பெறுகின்றனர். வாக்காளர்களை பொறுத்தவரை, எப்படியோ தங்களுக்கான படிவம் கைக்கு கிடைத்தால்போதும் என்கிற மனநிலையிலேயே உள்ளனர்; பி.எல்.ஓ.,க்களை பார்த்தாலே, படிவம் கேட்டு வாங்கிச்சென்றுவிடுகின்றனர்.
கண்காணிப்பு
ஒவ்வொரு பி.எல்.ஓ.,வும் எத்தனை படிவங்கள் வழங்கியுள்ளனர்; இன்னும் எத்தனை படிவங்கள் வழங்கவேண்டியுள்ளது என்கிற விவரங்களை உன்னிப்பாக கண்காணித்துக்கொண்டிருக்கிறோம். குறைந்த எண்ணிக்கையில் படிவம் வழங்கிய பி.எல்.ஓ.,க்களை கண்டறிந்து, பணிகளை வேகப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
பத்து பி.எல்.ஓ.,க்களுக்கு ஒருவர் வீதம் பி.எல்.ஓ., மேற்பார்வையாளர்கள்; 5 மேற்பார்வையாளருக்கு ஒருவர் வீதம், தாசில்தார் நிலையிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, படிவம் வழங்கல் பணிகள், நுண்மட்ட கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
தீவிர திருத்த பணிகளில், படிப்படியாக அனைத்து அரசுத்துறையினரும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசியல் கட்சியினர், வாக்காளர்கள் எவ்வித குழப்பமோ, பயப்பட தேவையில்லை. தீவிர திருத்தம் சிறப்பாக நடைபெறும்; செம்மையான வாக்காளர் பட்டியல் தயாராகும்.
இவ்வாறு, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

