/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்திமலை கோவிலுக்கு திரண்ட ரேக்ளா வண்டிகள்
/
திருமூர்த்திமலை கோவிலுக்கு திரண்ட ரேக்ளா வண்டிகள்
ADDED : ஜன 28, 2025 11:26 PM

உடுமலை; திருமூர்த்திமலை கோவிலுக்கு, தை அமாவாசைக்கு வழிபட விவசாயிகள் ரேக்ளா வண்டிகளில் நேற்று திரண்டு வந்தனர்.
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை, தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு, தை மற்றும் ஆடி அமாவாசையன்று, சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், வேளாண் வளம், கால்நடை வளம் சிறக்கவும், தைப்பட்ட சாகுபடி துவங்குவதற்கு முன், தை அமாவாசையன்று வழிபாடு நடத்துவதை பல நுாறு ஆண்டுகளாக கடைபிடித்து வருகின்றனர்.
தை அமாவாசை இன்று வருவதால், அதிகாலை மும்மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடக்கின்றன.
மேலும், முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஏராளமான பக்தர்கள் வரும் வாய்ப்புள்ளதால், கோவில் நிர்வாகம் சார்பில், பல்வேறு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாரம்பரிய முறைப்படி திருமூர்த்திமலைக்கு வந்து மும்மூர்த்திகளை தரிசனம் செய்ய, உடுமலை, பொள்ளாச்சி, குடிமங்கலம் என சுற்றுப்புற கிராமங்களிலிருந்து நுாற்றுக்கணக்கான ரேக்ளா வண்டிகள், குதிரை வண்டிகளில் விவசாயிகள் திருமூர்த்திமலைக்கு வந்ததால், ரோடுகள் களைகட்டியது. மினி ரேக்ளா போட்டிகள் போல், மாட்டு வண்டிகள் அணிவகுத்தன.

