/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிக்னல்களில் விளம்பர பலகை அகற்ற வேண்டும்! கலெக்டர் ஆபீசில் சமூக ஆர்வலர் 'தர்ணா'
/
சிக்னல்களில் விளம்பர பலகை அகற்ற வேண்டும்! கலெக்டர் ஆபீசில் சமூக ஆர்வலர் 'தர்ணா'
சிக்னல்களில் விளம்பர பலகை அகற்ற வேண்டும்! கலெக்டர் ஆபீசில் சமூக ஆர்வலர் 'தர்ணா'
சிக்னல்களில் விளம்பர பலகை அகற்ற வேண்டும்! கலெக்டர் ஆபீசில் சமூக ஆர்வலர் 'தர்ணா'
ADDED : செப் 01, 2025 10:51 PM
திருப்பூர்; திருப்பூரில் மாநகர பகுதியின் பிரதான சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில், தனியார் நிறுவனங்களின் விளம்பர பலகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. சிக்னல்களில், தலைக்கு மேல் தொங்கவிடப்பட்டுள்ள விளம்பர பலகைகள், அறுந்து விழுந்து உயிர் பலி விபத்துக்களை விளைவிக்கும் அபாயம் உள்ளது.
இவற்றை அகற்ற வேண்டுமென, சமூக ஆர்வலர் சரவணன், கலெக்டரிடம் மனு அளித்தார். இந்நிலையில், ஆக. 16ம் தேதியிட்டு, திருப்பூர் வடக்கு போக்குவரத்து சரக போலீஸ் உதவி கமிஷனர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
கொங்குநகர் போக்கு வரத்து சிக்னல்களில், சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து நான்கு சிக்னல்களே அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சிக்னல்கள் அனைத்தும், தனியார் நிறுவனத்தால் மற்றும் இதர நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது. சிக்னல்கள் அனைத்துக்கும் பராமரிப்பு மற்றும் பழுது நீக்க பணிகளையும், அந்நிறுவனமே மேற்கொண்டு வருகிறது.
சிக்னல்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் செய்வதற்கு தேவையான நிதியை, விளம்பரங்களால் மட்டும் பெற்றுவருகிறது. போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாகவும், ஆபத்தாகவும் விளம்பர பலகைகள் வைக்க கூடாது என்கிற விவரம் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமூக ஆர்வலர் சரவணன், போக்குவரத்து போலீசார் தனக்கு அளித்த பதில் கடிதம் மற்றும் இதுவரை அளிக்கப்பட்ட மனுக்கள் ஒட்டப்பட்ட மெகா பேனரை கழுத்தில் அணிந்து, கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். தரையில் அமர்ந்து, போக்குவரத்து சிக்னல்களில் தொங்கவிடப்பட்டுள்ள விளம்பர பலகைகளை உடனடியாக அகற்றக்கோரி தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர், கலெக்டரை சந்தித்து, மனு அளித்தார்.