/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிலக்கடலை பயிர் அபிவிருத்திக்கு மானியம்
/
நிலக்கடலை பயிர் அபிவிருத்திக்கு மானியம்
UPDATED : ஜூலை 09, 2024 01:58 AM
ADDED : ஜூலை 08, 2024 10:54 PM

திருப்பூர்;நிலக்கடலை அபிவிருத்திக்கு வழங்கப்படும் மானியத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலை, 10 ஆயிரம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அவிநாசி, திருப்பூர், ஊத்துக்குளி வட்டாரங்களில், தென்மேற்கு பருவமழை சமயத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியில், நிலக்கடலை உற்பத்தியை அதிகரிக்க மானியம் வழங்கப்படுகிறது. செயல் விளக்க திடல் அமைக்க, ஒரு விவசாயிக்கு, ஒரு எக்டருக்கு, 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.அந்த வகையில், ஊத்துக்குளி வட்டாரம், குன்னத்துர் சின்னியம்பாளையம் கிராமத்தில், டி.எம்.வி., 14 மற்றும் கதிரி 1812 ரகங்களை கொண்டு செயல் விளக்கத்திடல் அமைத்துள்ள விவசாயிகள் வெங்கடாசலம், சண்முகமூர்த்தி ஆகியோரின் தோட்டங்களை தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன், துணை வேளாண் அலுவலர் செந்தில்குமார், உதவி வேளாண் அலுவலர்கள் சத்தியவேல், ராதா ஆகியோர் பார்வையிட்டனர்.
அரசப்பன் கூறியதாவது;உணவு உற்பத்தியில் நம் நாடு தன்னிறைவு பெற்றிருந்தாலும், எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் பின்தங்கியுள்ளோம். நிலக்கடலை உற்பத்தியை அதிகரிக்க, வேளாண் துறை முனைப்புக் காட்டி வருகிறது. உயர் விளைச்சல் தரும் ரகம், கோடை உழவு, ஊட்டமேற்றிய தொழு உரம், விதை நேர்த்தி ஜிப்சமிடல், நுண்ணுாட்டச்சத்து இடுதல், உயிர் உரமிடுதல், உயிரியல் காரணிகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி செயல் விளக்கத்திடல் அமைக்கப்படுகிறது; அதன் வாயிலாக, மகசூல் கூடுகிறது; விவசாயிகளுக்கும் தொழில்நுட்பம் சென்றடைகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.