ADDED : டிச 09, 2024 08:04 AM
உடுமலை : பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு திருப்பூரைச் சேர்ந்த தன்னார்வலர்கள் விளையாட்டு உபகரணங்கள் வழங்கியுள்ளனர்.
மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில், கல்வித்துறையும், விளையாட்டு துறையும் பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றனர். இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
அவ்வகையில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஹாக்கி விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வெற்றி பெற்று வருகின்றனர்.
மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில், திருப்பூரைச் சேர்ந்த தன்னார்வல அமைப்பினர், பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஹாக்கி ஸ்டிக்குகள் மற்றும் பந்துகளை மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
பள்ளி தலைமையாசிரியர் பாபு விளையாட்டு உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். இதனால், மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.