/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயற்கை உணவுக்கு மாறுங்கள்... வான்மழை கருத்தரங்கில் அறிவுரை
/
இயற்கை உணவுக்கு மாறுங்கள்... வான்மழை கருத்தரங்கில் அறிவுரை
இயற்கை உணவுக்கு மாறுங்கள்... வான்மழை கருத்தரங்கில் அறிவுரை
இயற்கை உணவுக்கு மாறுங்கள்... வான்மழை கருத்தரங்கில் அறிவுரை
ADDED : நவ 02, 2025 03:23 AM

பல்லடம்: சமைத்த உணவை குறைத்து இயற்கை உணவுக்கு மாறுங்கள் என, பல்லடத்தில் நடந்த வான்மழை கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.
பல்லடம் வனம் அமைப்பின் சார்பில், வான் மழை மாதாந்திர கருத்தரங்கம், வனாலயம் அடிகளார் அரங்கில் நடந்தது. செயலாளர் சுந்தரராஜ் வரவேற்றார். தலைவர் சுவாதி கண்ணன், இணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, பொருளாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தாய்வழி இயற்கை உணவக நிறுவனர் மாறன் பேசியதாவது:
நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் தான், நம் உடலில் ஏற்படும் அனைத்து மாற்றங்களுக்கும் காரணம். தவறான உணவுகள் நோய்களை உண்டாக்கும். சரியான உணவுகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உணவு விஷயத்தில் பெற்றோர்களே பூஜ்ஜியமாக உள்ள போது, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் அப்படித்தான் இருக்கும். அடுத்த தலைமுறையை ஆரோக்கியமானதாக கொண்டுவர வேண்டாமா?
சமைத்த உணவுகளை குறைத்து இயற்கை உணவுகளை கூட்டுவது தான் சிறந்த முறை. நோயை தரக்கூடிய உணவு விஷயங்கள் தான் இன்று நமது வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ளன.
நமது குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் ஓடி ஓடி சம்பாதிக்கிறோம். ஆனால், குழந்தைகள் எடுத்துக் கொள்ளும் உணவுகளால் அவர்களது வாழ்க்கையே பாதிக்கப்பட்டு வருகிறது.
ஒருவேளை மட்டும் குழந்தைகளுக்கு சமைக்காத உணவை கொடுத்து பழக்கினால், இந்தியா சுதேசிக்கு மாறிவிட்டது என்று அர்த்தம். ஒரு நேரமாவது வீட்டில் சமைக்காமல் இருந்து பாருங்கள்.
ஆர்கானிக் பழங்களை விளைய வைத்து ஏன் விற்பனை செய்யக்கூடாது? கல்யாண வீடுகளில் வழங்கப்படும் கடினமான உணவுகள், நோய்க்கு அச்சாரமாக அமைகிறது. சாப்பிடும்போது மொபைல் போன் பயன்படுத்த மாட்டோம் என்ற நடைமுறையை பின்பற்றுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, மழைநீர் சேகரிப்பு நிபுணர் கிரிதரன் சிறப்புரையாற்றினார். படியூரை சேர்ந்த இயற்கை விவசாயி சுப்ரமணியத்துக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது. வனம் அமைப்பு இயக்குனர் அனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.

