ADDED : செப் 04, 2025 11:48 PM

வரலாறு படி, வரலாறு படை; சுவடு படி; சுவடு படை
எழுத்தாளர்களாக மாறும் 500 மாணவ, மாணவியர்
திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில், ஆயிரக்கணக்கில் மாணவர்கள் பயில்கின்றனர். இங்குள்ள நுாலகத்தை மாணவ, மாணவியர் நல்ல முறையில் பயன்படுத்தி வருகின்றனர். மாணவர்கள் மத்தியில் வாசிப்பு மற்றும் எழுத்து திறமையை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நுாலகர் சித்ரா தவப்புதல்வி, 500 மாணவ, மாணவியருக்கு எழுத்தாளர் என்ற அடையாளம் பெற காரணமாக இருந்திருக்கிறார். கல்லுாரி நுாலகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் உ.பி., லெட்ஸ் ரைட்ஸ் பப்ளிகேஷன்ஸ் இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
நுாலகர் கூறியதாவது:கல்லுாரி மாணவ, மாணவியர் மத்தியில் பேச்சு, நடனம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு திறமைகள் வெளிப்படுகின்றன. அவர்களின் சிந்தனை மற்றும் எழுத்து திறமையையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆர்வமுள்ள, 500 மாணவ, மாணவியை தேர்வு செய்து, அவர்களது வாசிப்பு மற்றும் சிந்திக்கும் ஆற்றலை மெருகேற்ற வழிகாட்டினேன். விளைவாக, 500 பேரும் தங்களது சமூக சிந்தனை, பயண அனுபவம், கதை, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை எழுதியுள்ளனர். அவர்களின் படைப்புகள் புத்தகமாக அச்சிடப்பட்டு அடுத்தாண்டு ஜனவரியில் வெளிவர இருக்கிறது. இதன் வாயிலாக அவர்களின் எழுத்தாற்றல், சிந்திக்கும் திறன் மேம்படும். மாணவ, மாணவியர் மத்தியில் வாசிப்பு மிக அவசியம். வாசிப்பு தான் நல்ல தலைவர்களை உருவாக்கும். 'வரலாறு படி, வரலாறு படை' ; 'சுவடு படி; சுவடு படை' என்பதே என் அறிவுரை.இவ்வாறு, அவர் கூறினார்.