/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 1 மாணவரை சங்கடப்படுத்திய 36வது கேள்வி! வேதியியல் தேர்வில் 'டுவிஸ்ட்' வைத்த தேர்வுத்துறை
/
பிளஸ் 1 மாணவரை சங்கடப்படுத்திய 36வது கேள்வி! வேதியியல் தேர்வில் 'டுவிஸ்ட்' வைத்த தேர்வுத்துறை
பிளஸ் 1 மாணவரை சங்கடப்படுத்திய 36வது கேள்வி! வேதியியல் தேர்வில் 'டுவிஸ்ட்' வைத்த தேர்வுத்துறை
பிளஸ் 1 மாணவரை சங்கடப்படுத்திய 36வது கேள்வி! வேதியியல் தேர்வில் 'டுவிஸ்ட்' வைத்த தேர்வுத்துறை
ADDED : மார் 28, 2025 03:27 AM

திருப்பூர்: பிளஸ் 1 பொதுத்தேர்வு முடியும் நாளில் நடந்த கணக்குப்பதிவியல், வேதியியல் தேர்வில் தேர்வுத்துறை 'டுவிஸ்ட்' வைத்தது. இருதேர்வுகளும் கடினமாக இருந்ததாக, தேர்வெழுதிய மாணவ, மாணவியர் புலம்பினர்.
மாவட்டத்தில் பிளஸ் 1 கணக்குப்பதிவியல் தேர்வெழுத, 11 ஆயிரத்து, 318 பேர் ஹால் டிக்கெட் பெற்றனர். இவர்களில், 250 பேர் தேர்வெழுதவில்லை. 11 ஆயிரத்து, 68 பேர் தேர்வெழுதினர். வேதியியல் தேர்வை, 15 ஆயிரத்து, 252 பேர் எழுத வேண்டும்; 15 ஆயிரத்து, 122 பேர் எழுதினர்; 130 பேர் தேர்வறை பக்கம் வரவில்லை.
கஷ்டம் தந்த கணக்கு பதிவியல்
சபிதா: ஒரு மதிப்பெண்ணில் முழு மதிப்பெண் பெற முடியும். கட்டாய வினா புதிதாக இருந்தது; இதுவரை இவ்வாறு கேட்டதில்லை. கேள்வியை புரிந்து கொண்டு விடையளிக்க சிரமமாக இருந்தது. இரண்டு, மூன்று மதிப்பெண்ணோடு ஒப்பிடுகையில், ஐந்து மதிப்பெண் ஓரளவு கை கொடுத்தது.
தர்ஷன்: முந்தைய ஆண்டு வினாத்தாளில் இடம் பெற்ற கேள்விகள் இல்லாமல், புதிய கேள்விகளாக இருந்தது. ஒரு மதிப்பெண் மட்டுமே கைகொடுத்தது. இரண்டு, மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் மூன்றுமே யோசித்து விடையெழுதும் வகையிலான, சிரமமான கேள்விகளாக இருந்தது.
சென்டம் குறையும்
திருப்பூர் கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் (கணக்குபதிவியல்) கவுசல்யா :
'மாணவர்களின் திறமைக்கு சவால் விடும் வகையில் வினாத்தாள் அமைந்திருந்தது. இதுவரை கேட்கப்படாத புதிய கேள்விகள் என்பதால், மெல்ல கற்கும் மாணவர்கள் சற்று தடுமாறியிருப்பார்கள்.
ஒரு மதிப்பெண்ணில் முழு மதிப்பெண் பெற முடியும். இரண்டு, மூன்று மதிப்பெண் இரண்டு கட்டாய வினாவும் பாடங்களுக்குள் இருந்து கேட்டதால், வினாத்தாள் சற்று சிரமமாக இருந்திருக்கும்.
தேர்ச்சி சதவீதம் குறையலாம். சென்டம் பெறுவோரின் எண்ணிக்கையும் குறையும்,' என்றார்.
வேதனை தந்தவேதியியல்
ரிதன்யா: இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் இரண்டிலும், கட்டாய வினா இதுவரை கேட்கப்படாத புதிய கேள்வியாக இருந்தது. ஐந்து மதிப்பெண் யோசித்து விடையெழுதுவதாக இருந்தது. எதிர்பார்த்த கேள்விகள் இடம் பெறவில்லை. ஒரு மதிப்பெண்ணில் முழு மதிப்பெண் பெற முடியும்.
சூர்யா: ஐந்து மதிப்பெண்ணில் ஒரு கேள்வி எழுத முடியாதபடி இருந்தது. கேள்வி அல்லது பகுதியில் இடம் பெற்றிருந்த கேள்வி இரண்டுமே சிரமமாக இருந்தது. கட்டாய வினா இதுவரை கேட்கப்படாதது. மற்ற வினாக்களுக்கு விடையளிக்க முடிந்தது; ஒரு மதிப்பெண் ஈஸியாக இருந்தது.
தேர்ச்சி சதவீதம்பாதிக்காது
மூலனுார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் லோகநாதன் (வேதியியல்): ''ஒரு மதிப்பெண்ணுக்கு முழுமையாக விடை எழுதியிருப்பர். எனவே, தேர்ச்சி சதவீதம் பாதிக்காது. ஆனால், இரண்டு மதிப்பெண், மூன்று மதிப்பெண் கட்டாய வினா பார்முலா அப்ளை செய்யும் வகையில் பாடங்களுக்குள் இருந்து கேட்டதால், சற்று கஷ்டமாக இருந்திருக்கும். ஐந்து மதிப்பெண், 36வது வினா, சாய்ஸ்ல் இரண்டில் ஒன்றை தேர்வு முடியாத படி இருந்தது; அனைவரும் புரிந்து விடை முழுமையாக எழுதியிருப்பது கஷ்டம்; சென்டம் குறையும்,' என்றார்.