/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க., நகர செயலாளராக போட்டா போட்டி
/
தி.மு.க., நகர செயலாளராக போட்டா போட்டி
ADDED : பிப் 18, 2025 11:54 PM
திருப்பூர்; தி.மு.க., நகர செயலாளராக இருந்த தினேஷ்குமார் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நகர செயலாளர் பதவியைக் கைப்பற்ற கட்சி நிர்வாகிகள் முனைப்பு காட்டத் துவங்கியுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார். தி.மு.க., திருப்பூர் வடக்கு மாநகர செயலாளராக கட்சி பொறுப்பில் இருந்து வந்தார்.
அண்மையில், கட்சியில் நிர்வாக வசதிக்காவும், வரும் 2026 தேர்தலை எதிர்கொள்ளும் விதமாகவும் கட்சி அமைப்பில் சில மாற்றங்களை கட்சி தலைமை மேற்கொள்ளத் துவங்கியுள்ளது. அதன் முதல் கட்டமாக மாவட்ட ெசயலாளர்கள் பதவியில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டது.
பதவிப்போட்டியில்சமரசம்
திருப்பூரைப் பொறுத்தவரை தி.மு.க.,வில் நான்கு ெதாகுதிகளை அடக்கிய ஒரு மாவட்ட செயலாளர் என்ற வகையில் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய இரு மாவட்ட செயலாளர்கள் உள்ளனர்.
சாமிநாதன் மாவட்ட செயலாளராகவும், செல்வராஜ் மாநகர் மாவட்ட செயலாளராகவும் முன்னர் பணியாற்றினர். அதன் பின்னர் கட்சியில் மாவட்ட அளவில் மாற்றம் செய்யப்பட்டது. இதில் வடக்கு மாவட்ட செயலாளராக செல்வராஜ்; தெற்கு மாவட்ட செயலாளராக சாமிநாதன் ஆகியோர் செயல்பட்டனர்.
அதன் பின்னர் கடந்த தேர்தலுக்கு முன்னர் கட்சி அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு, தெற்கு மாவட்ட செயலாளராக பத்மநாபன்; வடக்கு மாவட்டத்துக்கு செல்வராஜூம் நியமிக்கப்பட்டனர். நகர செயலாளராக நாகராஜ் நியமிக்கப்பட்டார்.
அதையடுத்து திருப்பூர் மாநகரம் தெற்கு வடக்கு என பிரிக்கப்பட்ட போது, வடக்கு நகர செயலாளராக தினேஷ்குமார்; தெற்கு நகரத்துக்கு நாகராஜூம் நியமிக்கப்பட்டனர்.
இரண்டாண்டுக்கு முன்னர் கட்சி அமைப்புக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டி ஏற்பட்டது. நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் சமரசம் பேசி சரி செய்யப்பட்டது.
மா.செ.,க்கள் நியமனம்
இந்நிலையில், தற்போது மீண்டும் தலா இரு சட்டசபை தொகுதி அடங்கிய மாவட்ட கட்சி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில், திருப்பூர் வடக்கு மற்றும் அவிநாசி தொகுதி அடங்கிய வடக்கு மாவட்ட செயலாளராக தினேஷ்குமார்; திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் தொகுதி அடங்கிய கிழக்கு மாவட்டத்துக்கு செல்வராஜ்; காங்கயம், தாராபுரம் தொகுதி அடங்கிய மேற்கு மாவட்டத்துக்கு சாமிநாதன்; மடத்துக்குளம், உடுமலை தொகுதி அடங்கிய தெற்கு மாவட்டத்துக்கு பத்மநாபனும் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் சாமிநாதன், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
நகர செயலாளர் யார்?
திருப்பூர் வடக்கு நகர செயலாளராக இருந்த தினேஷ்குமார் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் தற்போது நகர செயலாளர் பதவி காலியாக உள்ளது. இதைக் கைப்பற்ற பலரும் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர்.
வேலம்பாளையம் நகர செயலாளர் மற்றும் நகராட்சி தலைவராக இருந்த எஸ்.பி. மணி; தற்போதைய பகுதி செயலாளர் ராமதாஸ், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் தங்கராஜ் ஆகியோர் இப்பதவியை பெறும் நோக்கில், தங்கள் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
கட்சியினர் கூறுகையில், 'வடக்கு நகர செயலாளர் பதவியைக் கைப்பற்றும் முயற்சியில் சில முக்கிய நிர்வாகிகள் களம் இறங்கியுள்ளனர். இதில் மற்றொரு பிரச்னையும் உள்ளது.
தற்போதுள்ள இரு நகர அமைப்புகளுக்கு பதிலாக, முன்னர் போல் ஒரே மாநகர செயலாளர் பதவி மட்டும் இருக்கும் வகையில் மாற்றம் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. இதில் முடிவு செய்யப்படாமல் உள்ளதால் கட்சி தலைமை இப்பதவிக்கு யாரையும் அறிவிக்காமல் உள்ளது' என்றனர்.