/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பட்டம்' இதழ் தந்த ஊக்கம் மாணவருக்கு வந்த ஆக்கம்!
/
'பட்டம்' இதழ் தந்த ஊக்கம் மாணவருக்கு வந்த ஆக்கம்!
ADDED : நவ 12, 2024 06:26 AM

திருப்பூர்; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், நேற்று நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி - வினா போட்டியில், மாணவ, மாணவியர் தங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்தினர்.
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில், மாணவ, மாணவியருக்கு அறிவாற்றலை வளர்க்கும் நோக்கிலும், கற்றல் சார்ந்த தேடலை ஊக்குவிக்கும் வகையிலும், மாணவர்களை தேர்வுக்கு உற்சாகப்படுத்தும் வகையிலும், கடந்த, 2018 முதல், 'வினாடி வினா' போட்டி நடத்தப்படுகிறது.
இந்தாண்டுக்கான வினாடி - வினா விருது, 2024 -'25 போட்டி, 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் நடந்து வருகிறது. இவர்களுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் கை கோர்த்துள்ளது. சத்யா ஏஜென்சிஸ் இணைந்து நடத்துகிறது.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்படுகிறது. பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர் இடையே அரையிறுதி போட்டி நடத்தப்படுகிறது. இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதி போட்டி நடத்தப்படும். இறுதி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.
நேற்று, திருப்பூர், இடுவாயில் உள்ள விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. தகுதி சுற்றுக்கான போட்டியில், 48 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், 'ஏ' முதல் 'எச்' வரை ஆங்கில அகர வரிசையில், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு இடையே வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.
மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியில், 'பி' அணியில் இடம் பெற்ற, 11ம் வகுப்பு மாணவர்கள் தரணிஷ், சஞ்சீவ்குமார் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தாளாளர் முத்துக்குமாரசாமி, முதல்வர் மனோன்மணி, வினாடி - வினா ஒருங்கிணைப்பாளர் உம்முசபி ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.