/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு தேவையான... இயந்திரம் வந்தாச்சு! பலத்த போலீஸ் பாதுகாப்பில் இருப்பு வைப்பு
/
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு தேவையான... இயந்திரம் வந்தாச்சு! பலத்த போலீஸ் பாதுகாப்பில் இருப்பு வைப்பு
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு தேவையான... இயந்திரம் வந்தாச்சு! பலத்த போலீஸ் பாதுகாப்பில் இருப்பு வைப்பு
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு தேவையான... இயந்திரம் வந்தாச்சு! பலத்த போலீஸ் பாதுகாப்பில் இருப்பு வைப்பு
ADDED : மார் 25, 2024 12:08 AM

உடுமலை;பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு தேவையான பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்; இரு சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தருவிக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்டது உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, நிலையான கண்காணிப்பு குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே வேளையில், ஓட்டுப்பதிவுக்கு தேவையான பணிகளையும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். உடுமலை சட்டசபை தொகுதியில், 127 ஓட்டுப்பதிவு மையங்களில், 295 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மடத்துக்குளம் சட்டசபை தொகுதியில், 117 ஓட்டுப்பதிவு மையங்களில், 287 ஓட்டுச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம், கழிப்பிடம் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள் குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
போதிய வசதிகளில்லாத ஓட்டுச்சாவடிகளில், உடனடியாக மேம்பாட்டு பணிகளை துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட, 6 சட்டசபை தொகுதிகளிலும், நகர பகுதியில் 821, கிராமப்பகுதியில் 880 என மொத்தம் 1,701 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
இந்த ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவுக்கு தேவையான பணிகள் தீவிரமடைந்துள்ளது. அவ்வகையில், நேற்று, உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வாயிலாக உடுமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அதன்படி, உடுமலை சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு தேவையான 355 'பேலட்' யூனிட் 355 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 385 'விவி பேட்' இயந்திரங்கள் நேற்று திருப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டு, உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் வைக்கப்பட்டது.
இதே போல, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிக்கு தேவையான, 347 பேலட் யூனிட், 347 கன்ட்ரோல் யூனிட், மற்றும் 375 விவி பேட் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்ட வாகனங்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்பாக திறக்கப்பட்டு, இருப்பு அறைக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜஸ்வந்த் கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் இருப்பு அறைக்கு 'சீல்' வைத்தனர்.
அதன்பிறகு, துப்பாக்கி ஏந்திய போலீசார் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு, இரு சட்டசபை தொகுதிகளிலும், ஓட்டுப்பதிவுக்கு தேவையான பணிகள் தீவிரமடைந்துள்ளது.

