/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடி மாத ஆன்மிக பயணம் பக்தர்கள் மத்தியில் குழப்பம்
/
ஆடி மாத ஆன்மிக பயணம் பக்தர்கள் மத்தியில் குழப்பம்
ADDED : ஜூலை 15, 2024 11:12 PM
திருப்பூர்;ஆடி மாத ஆன்மிக பயணம் செல்லும் திட்டம், திருப்பூர் மண்டலத்தில் இருக்கிறதா, இல்லையா என, பக்தர்கள் குழப்பத்துடன் காத்திருக்கின்றனர்.
ஆடி மாதம், ஆன்மிக பயணமாக, அம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்லும் திட்டத்தை, அரசு அறிவித்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவில் பராமரிப்பு மட்டுமின்றி, பக்தர்களுக்கான ஆன்மிக பணிகளும் செய்யப்படுகிறது.
அதன்படி, பக்தர்களை பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு அழைத்து செல்லும் திட்டமும் அமலில் உள்ளது. அதன்படி, ஆடி மாதம், அம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்லும் திட்டம் அறிவிக்கப்பட்டது. கோவை, திருச்சி, தஞ்சை மண்டலங்களுக்கு உட்பட்ட அம்மன் கோவில்களுக்கு, 1000 பக்தர்களை அழைத்து செல்ல உத்தேசிக்கப்பட்டது. ஒவ்வொரு மண்டலம் வாரியாக, அம்மன் கோவில்களுக்கு பயணம் செல்ல விரும்பும் பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்பட்டது.
திருப்பூர் மண்டலத்தில் இதுதொடர்பாக எவ்வித தகவலும் இல்லை; ஆடி மாத அம்மன் கோவில் ஆன்மிக பயண திட்டம், திருப்பூர் மண்டலத்தில் உள்ளதா, இல்லையா என்று பக்தர்கள் குழம்பிவிட்டனர். ஒவ்வொரு மண்டலமும், இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, 60 முதல், 70 வயதுள்ள பக்தர்கள், உடல் ஆரோக்கியமானவர்கள், நிரந்தர முகவரியில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, திருப்பூர் மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறையில் இருந்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், ஆடிமாத அம்மன் கோவில் பயணம் என்பது திருப்பூருக்கு, இருக்கிறதா? இல்லையா? என, பக்தர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
தமிழக அரசு அறிவித்தபடி, இம்மாதம், 19 அல்லது 26, ஆகஸ்ட் 2 அல்லது 9 ஆகிய தேதிகளில், ஆன்மிக பயணத்தை துவக்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. இருப்பினும், திருப்பூர் மண்டலத்தில் எவ்வித அறிவிப்பும் இல்லாததால், பக்தர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இதுகுறித்து அறநிலையத்துறை இணை கமிஷனர் குமரதுரையிடம் கேட்டபோது, ''பக்தர்களிடம் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது; அடுத்தகட்ட அறிவிப்பு வந்த பின், ஆன்மிக பயணம் குறித்து முடிவு செய்யப்படும்,'' என்றார்.

