/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தக்காளி வரத்து குறைவு விலை சரிவால் பாதிப்பு
/
தக்காளி வரத்து குறைவு விலை சரிவால் பாதிப்பு
ADDED : மார் 15, 2026 06:14 AM

உடுமலை: உடுமலை பகுதிகளில் தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில், விலையும் சரிந்துள்ளதால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
உடுமலை பகுதிகளில் விளையும் தக்காளி உள்ளிட்ட விளைபொருட்கள் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. கேரளா மாநிலம் மற்றும் பிற மாவட்ட வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
மழை பொழிவு குறைவு, வறட்சி உள்ளிட்ட காரணங்களால், தக்காளி மகசூல் பாதித்து வரத்தும் குறைந்துள்ளது.
சராசரியாக, தினமும், 50 ஆயிரம் பெட்டிகள் (14 கிலோ வீதம்) வரை வரத்து காணப்படும் நிலையில், தற்போது, 3 ஆயிரம் முதல், 10 ஆயிரம் பெட்டிகள் வரை மட்டுமே வரத்து உள்ளது.
வரத்து குறைந்துள்ள நிலையில், வியாபாரிகள் வருகையும் குறைந்துள்ளதால், கடந்த ஒரு வாரமாக, விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.
கடந்த மாதம், ஒரு பெட்டி, ரூ. 600 வரை விற்ற நிலையில், தற்போது. ரூ. 100 ஆக குறைந்துள்ளது. மொத்த மார்க்கெட்டில், தக்காளி ஒரு கிலோ ரூ. 7 வரை மட்டுமே விற்கப்படுகிறது. பறிப்பு கூலி, போக்குவரத்து செலவுக்கு கூட கட்டுபடியாகவில்லை, என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், ''தக்காளி சாகுபடிக்கு, ஏக்கருக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் நிலையில், மழை பொழிவு குறைந்து, கடும் வறட்சி காணப்படுகிறது. நோய் தாக்குதல், வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக, மகசூல் பெருமளவு குறைந்துள்ளது.
வியாபாரிகள் வருகை குறைவால் விலையும் சரிந்துள்ளதால், பறிப்பு கூலி, போக்குவரத்து செலவு, கமிஷன் என கணக்கிடும் போது, நஷ்டம் தான் ஏற்படுகிறது.
அதனால்,தக்காளியை பறிக்காமல் வயல்களிலேயே வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது,' என்றனர்.

