/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொய்யலில் நீர் மாதிரி சேகரிப்பு; சாய ஆலைகளுக்கு எச்சரிக்கை
/
நொய்யலில் நீர் மாதிரி சேகரிப்பு; சாய ஆலைகளுக்கு எச்சரிக்கை
நொய்யலில் நீர் மாதிரி சேகரிப்பு; சாய ஆலைகளுக்கு எச்சரிக்கை
நொய்யலில் நீர் மாதிரி சேகரிப்பு; சாய ஆலைகளுக்கு எச்சரிக்கை
ADDED : அக் 11, 2024 11:48 PM

திருப்பூர் : பருவமழைக்காலம் துவங்கியுள்ளதையடுத்து, திருப்பூர் பகுதி சாய ஆலைகள், சுத்திகரிப்பு மையங்களுக்கு மாசுகட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூரில் மொத்தம் 553 சாய ஆலைகள் உள்ளன. இவற்றில், 452 ஆலைகள், 18 சாயக்கழிவுநீர் பொது சுத்திகரிப்பு மையங்களை சார்ந்து இயங்குகின்றன. சாய ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், குழாய் மூலம், பொது சுத்திகரிப்பு மையங்களுக்கு கொண்டுவரப்பட்டு, ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கப்படுகிறது. இவைதவிர, சுத்திகரிப்பு கட்டமைப்புகளை உள்ளடக்கிய 101 சாய ஆலைகள் இயங்குகின்றன.
சாய ஆலைகளின் இயக்கத்தை மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். வாரியத்தில் அனுமதி பெறாத முறைகேடு சாய ஆலைகள் மட்டுமின்றி, அனுமதி பெற்ற சாய ஆலைகளிலிருந்தும் கூட, சில நேரங்களில், சாயக்கழிவுநீர் வெளியேறி நீர் நிலைகளில் கலக்க வாய்ப்பு உள்ளது.
வடகிழக்கு பருவமழை காலம் துவங்கியுள்ளதையடுத்து, திருப்பூர், கோவை மாவட்டங்களில் தொடர் மழை பெய்துவருகிறது. இதனால், திருப்பூர் நொய்யலாற்றில் வழக்கத்தைவிட அதிக வெள்ளம் ஓடுகிறது. இதையடுத்து, மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் குழுவினர், நொய்யலாற்றில் ஆங்காங்கே நீர் மாதிரி சேகரித்து, டி.டி.எஸ்., அளவுகளை பரிசோதித்துவருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக ஆற்றில் சாயக்கழிவுநீரை திறந்துவிட்ட நிறுவனத்தை அடையாளம் காண கள ஆய்வுகள் மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், சாய ஆலைகள், பொது சுத்திகரிப்பு மையங்களுக்கு மாசுகட்டுப்பாடு வாரியம் சார்பில், எச்சரிக்கை சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
----
நொய்யல் ஆற்றில், நீர் மாதிரியை சேகரிக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர்.