/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
களைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம்
/
களைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம்
ADDED : அக் 02, 2025 01:15 AM

திருப்பூர்; திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பனியன் உற்பத்தியாளர் சங்கங்களில் நேற்று நடந்த சரஸ்வதி பூஜையில், தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர்.
நேற்று, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. திருப்பூரில், பனியன் உற்பத்தி நிறுவனங்கள், நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி என அனைத்துவகை ஜாப்ஒர்க் நிறுவனங்களிலும், சரஸ்வதி பூஜை நடைபெற்றது.
நேற்றுமுன்தினம் இரவிலேயே, தொழிலாளர்கள் அவரவர் பயன்படுத்தும் ஆடை உற்பத்தி இயந்திரங்கள், நிறுவன பணியிடங்களை சுத்தம் செய்தனர்.
வாயில் கதவுகளில் மாவிலை தோரணம், விதவிதமான வண்ண காகித அலங்காரங்கள் தொங்கவிடப்பட்டன; வாழைக்கன்றுகள் கட்டப்பட்டன. வாசலில் சாணம் தெளித்து, அழகிய கோலமிட்டு தயார்படுத்தினர்.
பனியன் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பின்னலாடை துறை சார்ந்த சங்கங்களில் நேற்று, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
நேற்று மதியம், 2:53 மணி முதல் தசமி திதி துவங்கியது. சில நிறுவனங்களில் மட்டும் காலை வேளையில் பூஜை நடந்தன. பெரும்பாலான நிறுவனங்களில், மாலை வேளையிலேயே பூஜைகள் நடைபெற்றன.
விநாயகர், சரஸ்வதி, பார்வதி, லட்சுமி படங்கள் வைக்கப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. வாழை இலையில், பழ வகைகள், அவல், பொரி, சுண்டல், பாயாசம் படையலிடப்பட்டது.
புது கணக்கு துவக்குவதற்கான புத்தகங்கள், ஆடை உற்பத்திக்கு கைகொடுக்கும் இயந்திரங்களுக்கு, சந்தனம், குங்குமம் பொட்டு வைக்கப்பட்டது. தெய்வங்கள் மற்றும் இயந்திரங்களுக்கு கற்பூர தீபம் காட்டப்பட்டு, பூஜை செய்யப்பட்டது.
சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், தொழிலாளர் பயன்படுத்தும் டூவீர்கள், தண்ணீரில் கழுவி சுத்தம் செய்யப்பட்டன. அவற்றுக்கு பொட்டு, மாலை போடப்பட்டு, பூஜை செய்யப்பட்டது.
நிறுவனங்கள், பனியன் உற்பத்தியாளர் சங்கங்களில் நடந்த பூஜையில், அலுவலர்கள், தொழிலாளர்கள் அனைவரும் பங்கேற்றனர். அவர்களுக்கு, அவல், பொரி, கடலை, பாயாசம் முதலான பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
வீடுகளில் சுவாமி படங்களுக்கு பூவால் அலங்கரித்து, குழந்தைகளின் பள்ளி புத்தகங்களை பூஜையில் வைத்து, பொங்கல், சுண்டல் உட்பட உணவுப்பண்டங்களை படையல் வைத்து வழிபட்டனர்.
திருப்பூர் நகரம் மற்றும் புறநகரங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள், உதவி கமிஷனர் அலுவலகம், தீயணைப்பு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பொரி, கடலை, பொங்கல் ஆகியவற்றை சுவாமிக்கு படைத்து, வழிபட்டனர்.