/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாத்துக்குடி துறைமுகத்துக்கு பெரிய கப்பல் வருமா? ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பு
/
துாத்துக்குடி துறைமுகத்துக்கு பெரிய கப்பல் வருமா? ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பு
துாத்துக்குடி துறைமுகத்துக்கு பெரிய கப்பல் வருமா? ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பு
துாத்துக்குடி துறைமுகத்துக்கு பெரிய கப்பல் வருமா? ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 11, 2025 11:15 PM

திருப்பூர்: 'பெரிய கப்பல்கள் (Mother Vessles), துாத்துக்குடி துறைமுகம் வந்து செல்ல விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
துாத்துக்குடி துறைமுக சேவை பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், பாப்பீஸ் ஓட்டலில் நடந்தது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். துாத்துக்குடி துறைமுக ஆணைய தலைவர் தலைவர் சுஷந்தகுமார் புரோஹித் , துணை தலைவர் ராஜேஷ் சவுந்திரராஜன் ஆகியோர், திருப்பூர் தொழில்துறையின் எதிர்பார்ப்பு குறித்து கேட்டறிந்தனர்.
திருப்பூர் வளர்ச்சிக்கு
துறைமுகம் பங்களிப்பு
ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி பேசியதாவது:
திருப்பூர் ஏற்றுமதி வர்த்தக வரலாற்றில், துாத்துக்குடி துறைமுகத்தை குறிப்பிடாமல் இருக்கவே முடியாது. அந்தளவுக்கு, திருப்பூர் தொழில்துறையும், துாத்துக்குடி துறைமுகமும் சகோதரத்துவத்துடன் இணைந்து செயல்பட்டதால் மட்டுமே திருப்பூரின் வளர்ச்சி கிடைத்தது. இறக்குமதியாளர்கள் குறைந்த காலகட்டத்தில் ஆடைகளை இறக்குமதி செய்ய விரும்புகின்றனர். சீனாவை பொறுத்தவரை, ஐந்து பெரிய துறைமுகங்கள் உள்ளன.
தொழில்துறையினருக்கு
பெரும் தடைக்கற்கள்
அங்கிருந்து அமெரிக்க துறைமுகத்துக்கு, 14 முதல், 18 நாட்களில் சரக்குகள் சென்றடைகின்றன. திருப்பூர், கரூர், கோவையில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள், நியூயார்க் துறைமுகம் சென்றடைய 35 முதல் 40 நாட்களாகிறது. மற்றொரு துறைமுகம் சென்றடைய ,60 நாட்களாகிறது. இது, வர்த்தகத்தை அதிகரிக்க செய்யும் தொழில்துறையின் முயற்சிக்கு பெரும் தடையாக இருக்கிறது.
துறைமுக சேவையில் புதிய மாற்றங்கள் வர வேண்டும். குறிப்பாக, பெரிய சரக்கு கப்பல்கள், துாத்துக்குடி வருவதில்லை; கொழும்பு வரை மட்டுமே வருகிறது. துாத்துக்குடி துறைமுக சரக்குகளை, கொழும்பு எடுத்துச்சென்று, பிறகு, பெரிய கப்பலில் ஏற்ற, குறைந்தது இரண்டு வாரகாலம் ஆகிறது. எனவே, பெரிய சரக்கு கப்பல்கள், துாத்துக்குடி துறைமுகம் வந்து செல்ல வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கோரிக்கைகள் விரைவில்
நிறைவேற வாய்ப்பு
முன்னதாக, துாத்துக்குடி துறைமுக ஆணைய தலைவர் சுஷந்த்குமார் புரோஹித் பேசுகையில், ''திருப்பூர் 'டாலர் சிட்டி' நகரம், நீண்டகாலமாக துாத்துக்குடி துறைமுகத்துடன் தொடர்பில் இருக்கிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் எங்களுக்கு புரிகிறது. உங்களின் புதிய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். விரைவில், சர்வதேச கப்பல் போக்குவரத்து வார விழா நடக்க உள்ளது. அவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். ஏற்றுமதியாளர்களும் பங்கேற்க வேண்டும். அதன் வாயிலாக, தங்கள் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வாய்ப்புள்ளது,'' என்றார்.
ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினர் துணை குழு தலைவர் சிவசுப்பிரமணியம் நன்றி கூறினார்.
---
துாத்துக்குடி துறைமுக ஆணைய தலைவர் தலைவர் சுஷந்தகுமார் புரோஹித் , துணை தலைவர் ராஜேஷ் சவுந்திரராஜன் ஆகியோர், திருப்பூர் ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடினர்.