/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது!
/
ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது!
ADDED : நவ 09, 2025 12:18 AM

பல்லடம்: கிராமப் பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பல்லடம் போலீசார், 246 சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில், அதிகளவு குற்ற சம்பவங்கள் நடக்கும் பகுதிகளில் பல்லடமும் ஒன்று. காரணம், திருப்பூரைப் போன்றே, வெளி மாநில தொழிலாளர்கள் பல்லடத்தில் பரவலாக வசிக்கின்றனர்.
தொழிலாளர்கள் போர்வையில், சமூக விரோதிகளும் நுழைவது குற்ற சம்பவங்களுக்கு காரணமாகிறது. எனவே, கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, கஞ்சா கடத்தல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களும், பல்லடத்தில் அடிக்கடி நடக்கின்றன.
குறிப்பாக, பல்லடம் போலீஸ் எல்லைக்கு உட்பட்டு, தொழிலாளர்கள் மிக நெருக்கமாக வசிக்கும், புறநகர பகுதிகளில்தான், அதிகப்படியான குற்ற சம்பவங்கள் நடக்கின்றன.
குற்ற சம்பவங்களின் போது, உண்மையான குற்றவாளிகளை கண்டறிவதில், சிசிடிவி கேமராக்கள் தான் போலீசாருக்கு மிகவும் உதவியாக உள்ளன. எனவே, பாதுகாப்பு நடவடிக்கையாக சிசிடிவி கேமராக்கள் பொருத்துமாறு, போலீசார், பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.
பல்வேறு சம்பவங்களின் போது, கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் தான் போலீசாருக்கு உதவி வருகின்றன. இச்சூழலில், கண்காணிப்பை தீவிரப்படுத்தும் நோக்கில், பல்லடம் போலீசார், கிராமப் பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்களை விரிவுபடுத்தி உள்ளனர்.
பல்லடம் நகரப் பகுதி மட்டுமன்றி, கரைப்புதுார், அருள்புரம், ராயர்பாளையம், மகாலட்சுமி நகர், வடுகபாளையம் புதுார், சித்தம்பலம் புதுார், பணிக்கம்பட்டி, சின்னக்கரை, கோடங்கிபாளையம், பருவாய் உள்ளிட்ட, 60க்கும் மேற்பட்ட இடங்களில், மொத்தம், 246 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
போலீசார் கூறுகையில், 'ஏற்கனவே உள்ள சிசிடிவி கேமராக்களைத் தவிர்த்து, 246 சிசிடிவி கேமராக்கள் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ளன. சி.எஸ்.ஆர்., நிதியை பயன்படுத்தி, கேமராக்கள் பொருத்தப்பட்டு, கிராமப் பகுதிகளும் கண்காணிப்பில் உள்ளன.
விரைவில், போலீஸ் ஸ்டேஷன் வளாகத்திலேயே, கண்காணிப்பு அறையும் உருவாக்கப்பட்டு, ஒட்டுமொத்த சிசிடிவி கேமராக்களின் பதிவும் ஒரே இடத்தில் கண்காணிக்கப்படும்.
பொதுமக்களும் தாங்களாக முன்வந்து குடியிருப்பு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி குற்ற சம்பவங்களை தடுக்க முன்வர வேண்டும்,' என்றனர்.

