டிராபிக் போலீசை கன்னத்தில் அறைந்த கொத்தனார் கைது
டிராபிக் போலீசை கன்னத்தில் அறைந்த கொத்தனார் கைது
ADDED : ஜூலை 17, 2026 07:32 PM

திருச்சி: திருச்சி அருகே, போக்குவரத்து போலீசின் கன்னத்தில் அறைந்த கொத்தனார் கைதானார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை மாரியம்மன் கோவில் அருகே, நேற்று முன்தினம் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே ஒரே பைக்கில் வந்த மூவரை நிறுத்தி, சோதனையிட்டனர்.
இதில், பைக்கை ஓட்டி வந்தவர் மதுபோதையில் இருந்தது தெரிந்தது. இதையடுத்து, பைக்கை பறிமுதல் செய்த போலீசார், காலையில் போலீஸ் ஸ்டேஷன் வரும்படி கூறினர். இதனால், ஆத்திரம் அடைந்த போதை நபர், போக்குவரத்து போலீஸ் உதயபாண்டியன், 27, என்பவரை கன்னத்தில் அறைந்தார்.
மேலும், அவரது போலீஸ் சீருடையை கிழித்து, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து, மணப்பாறை போலீசில் உதயபாண்டியன் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், உதயபாண்டியனை தாக்கிய மணியாரம்பட்டியை சேர்ந்த கொத்தனார் பாலகிருஷ்ணன், 25, என்பவரை கைது செய்தனர்.
