/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின் விபத்தை தடுக்க மின்வாரியம் அறிவுரை
/
மின் விபத்தை தடுக்க மின்வாரியம் அறிவுரை
ADDED : அக் 03, 2025 11:28 PM
விழுப்புரம் : மின்கம்பிகள் அறுந்து தரையில் விழுந்தால் அதன் அருகில் செல்வதோ, அதனை தொட முயற்சிப்பதோ கூடாது என, விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
வீடுகளில் மின் கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்க ஆர்.சி.டி., பொருத்த வேண்டும். உயரழுத்த மின்பாதைக்கும், கட்டடத்திற்கும், 6 அடி இடைவெளியும், தாழ்வழுத்த மின்பாதைக்கும் கட்டடத்திற்கும், 4 அடி இடைவெளியும் இருக்க வேண்டும்.
மின் கம்பங்கள் மற்றும் ஸ்டே கம்பிகளில் கயிறு கட்டி துணி காய வைத்தல் மற்றும் கால்நடைகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும்.
மின்பாதைகளுக்கு கீழும், அருகிலும் நீளமான உலோக கம்பிகள் எடுத்து செல்லக்கூடாது. மின்கம்பிகள் அறுந்து தரையில் விழுந்தால் அதன் அருகில் செல்வதோ, அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஈரமான கைகளுடன் சுவிட்சுகள், பிளக்குகள் இயக்குவதை தவிர்க்க வேண்டும். மின்வேலி அமைப்பது கிரிமினல் குற்றம். மீறும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தங்கள் பம்புசெட்டில் ஒயரிங் பாதுகாப்பாக உள்ளதா என உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
மின்சாரம் சார்ந்த புகார்களை, 9498794987 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.