/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை
/
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை
ADDED : பிப் 17, 2026 04:15 AM

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக் கொள்ளையில் தமிழகம் முழுதும் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி தேர் திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று இரண்டாம் நாள் விழாவாக மயானக் கொள்ளை நடந்தது.
அதனையொட்டி காலை 6:00 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. 9:45 மணிக்கு கோவிலில் இருந்து சிம்ம வாகனத்தில் விஸ்வரூப கோலத்தில் அங்காளம்மன் மயானத்திற்கு புறப்பாடு நடந்தது.
அம்மனுக்கு முன்பாக பூசாரிகள் பிரம்ம கபாலத்தை எடுத்து ஆடி வந்தனர். வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாணயங்கள், காய்கறிகள், உணவு பொருட்கள், தானியங்களை அம்மன் மீது வாரி இறைத்தனர். சேவல்களை காணிக்கையாக செலுத்தினர். 10:15 மணிக்கு அங்காளம்மன் மயானத்திற்கு வந்ததும், அங்கு பக்தர்கள் குவித்து வைத்திருந்த காய்கறிகள், பழங்கள், தானியங்கள், உணவு பொருட்களை படையலிட்டு பூசாரிகள் கொள்ளை விட்டனர்.
அப்போது பிரம்ம கபாலத்தை அங்காளம்மன் ஆட்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாட வீதி வழியாக அம்மனை கோவிலுக்கு கொண்டு வந்தனர். விழாவில் தமிழகம் முழுதும் இருந்து வந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, அறங்காவலர்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்தனர்.
எஸ்.பி., சாய் பிரனீத் மேற்பார்வையில், டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலுார், வேலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

