/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
14 வயது சிறுவனை அடித்து கொடுமைப்படுத்தியவர் கைது
/
14 வயது சிறுவனை அடித்து கொடுமைப்படுத்தியவர் கைது
ADDED : நவ 01, 2025 03:27 AM
திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர், 14 வயது சிறுவன். இவருடைய பெற்றோர் இறந்துவிட்டதால், தாய்மாமன் பராமரிப்பில் இருந்து கொண்டு சத்தியமங்கலத்திலுள்ள தனியார் விடுதியில் தங்கி 9 ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
அந்த சிறுவனை கவனிக்க முடியாத தாய்மாமன், செஞ்சியிலுள்ள ராஜ்குமார் என்பவரிடம் ஒப்படைத்து, பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக ராஜ்குமார், திண்டிவனம் மயிலம் ரோட்டிலுள்ள தனக்கு சொந்தமான பாடி பில்டர்ஸ் லேத்தில் வேலை செய்வதற்காக சிறுவனை வைத்திருந்தார்.
இந்நிலையில் லேத்திலிருந்த வெல்டிக் மிஷின், கட்டிங்மோட்டார், டிரில்லிங் மிஷின் ஆகிய இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போய்விட்டது.
இதற்கு சிறுவன்தான் காரணம் என்று கூறி, ராஜ்குமார், அவரது மனைவி விமலா இருவரும் சேர்ந்த சிறுவனை அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு தகவல் தெரிந்தது.இதன் பேரில் நேற்று லட்சுமிபதி திண்டிவனம் டவுன் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக டவுன் போலீசார் கணவன், மனைவி மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் ராஜ்குமாரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

