/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ம.க., விருப்பு மனு வாங்கும் நிகழ்ச்சி
/
பா.ம.க., விருப்பு மனு வாங்கும் நிகழ்ச்சி
ADDED : ஜன 10, 2026 07:03 AM

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நேற்று துவங்கிய பா.ம.க., விருப்ப மனு பெறும் நிகழ்ச்சியில், முதல் நாளான நேற்று 2000 பேர் மனு கொடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., சார்பில், வரும் சட்டசபை தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடுபவர்களிடமிருந்து விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நேற்று காலை 10:00 மணிக்கு துவங்கியது.
கடலுார், சேலம், சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பா.ம.க.,வினர் வாகனங்களில் வந்திருந்ததால், தைலாபுரம் தோட்டத்தை சுற்றி வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சியை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் துவக்கி வைத்து சென்ற பிறகு, கவுரவ தலைவர் மணி, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ஆகியோர் விருப்ப மனுவை பெற்றனர்.
இதில் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி போட்டியிட வேண்டுமென 500க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் மாவட்ட நிர்வாகி புகழேந்தி போட்டியிடக்கோரி 100 பேர் விருப்ப மனுவை பெற்றனர். புகேழந்தி, முன்னாள் அ.தி.மு.க.,அமைச்சர் சண்முகத்தின் சகலை ஆவார்.
இதே விக்கிரவாண்டி தொகுதியில், தற்போதைய மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.,வும், அன்புமணியின் தீவிர ஆதரவாளரான சிவக்குமார் போட்டியிடுவதற்கு கட்சி தலைமையிடம் விருப்பு மனு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ம.க., சார்பில் பொது தொகுதியில் போட்டியிடுவதற்கு 1000 ரூபாயும், தனி தொகுதி மற்றும் பெண்களுக்கு 500 ரூபாய் பெறப்படுகிறது.
அதே சமயத்தில் அன்புமணி தரப்பினர் பொது தொகுதியில் போட்டியிட 10 ஆயிரம் ரூபாயும், தனி தொகுதி, பெண்களுக்கு 5,000 ரூபாயும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து பா.ம.க.,வினர் 2000 பேர் வரை விருப்ப மனு கொடுத்தனர். தொடர்ந்து வரும் 12 ம் தேதி வரை மனு கொடுக்கலாம் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.
மனு பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவுரவ தலைவர் மணி கூறுகையில், 'அன்புமணி தரப்பினர் அ.தி.மு.க.,விடம் ஒப்பந்தம் போட்டதாக தெரியவில்லை. எத்தனை தொகுதிகள் என எங்களுக்கு தெரியாது. வரும் தேர்தலில் ராமதாஸ் கூறினால் போட்டியிடுவேன்.
நான் இதுவரை எந்த தொகுதிக்கும் விருப்ப மனு கொடுக்கவில்லை. 46 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். ராமதாஸ் கூறினால் தான் விருப்ப மனு கொடுப்பேன்' என்றார்.
பென்னாகரம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ள மணி, வரும் தேர்தலில் போட்டியிடாமல், தன்னுடைய மகனும், மாநில இளைஞர் சங்க தலைவரான தமிழ்க்குமரனுக்கு விட்டுக் கொடுப்பார் என கூறப்படுகிறது.

