ADDED : மார் 03, 2026 03:29 AM

நிரந்தர பட்டா மாற்ற மனு விழுப்புரம் அடுத்த ஆனாங்கூர் இருளர் குடியிருப்பை சேர்ந்த மக்கள் அளித்த மனு:
பழங்குடி இருளர் இனத்தை சேர்ந்த நாங்கள் 10 குடும்பங்கள் பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறோம். எங்கள் இடத்திற்கு தற்காலிக வீடு கட்டுவதற்கான நிபந்தனை பட்டா கடந்த 2017ம் ஆண்டு வழங்கப்பட்டது. அதனை எங்களுக்கு நிரந்தர பட்டாவாக மாற்றி கிராம கணக்கு பதிவு செய்து கணினி பட்டாவாக மாற்றி தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை விழுப்புரம் அடுத்த முத்தாம்பாளையம் திருமலை நகரைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் நகர் மனைப்பிரிவில் பொது உபயோகத்திற்கு பூங்கா மற்றும் புல்வெளி இடம் உள்ளது. இந்த இடத்தை 2 பேர் ஆக்கிரமித்து பத்திரப்பதிவு செய்துள்ளனர். எனவே, பொது இடம் ஆக்கிரமிப்பை அகற்றி, பத்திரப்பதிவை ரத்து செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் அகற்றப்படுமா? பால்ராம்பட்டு பகுதியில் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் அளித்த மனு:
சின்னசேலம் அடுத்த பால்ராம்பட்டு ஊராட்சி பகுதியில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் உள்ளது. இந்நிலையில், பால்ராம்பட்டு குறுக்கு சாலையில் தனி நபர் இடத்தில் மேலும் ஒரு டாஸ்மாக் அமைப்பதற்கு கட்டடம் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ஏற்கனவே உள்ள டாஸ்மாக் கடையால் மது அருந்தும் நபர்களால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு கடை புதிய டாஸ்மாக் கடையை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கலைஞர் வீடு வழங்க கோரிக்கை காட்டுஎடையார் கிராம மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், உளுந்துார்பேட்டை அடுத்த காட்டுஎடையார் கிராமத்தில் வறுமை நிலையில் தினக்கூலிகளான நாங்கள் குடிசை வீட்டில் வசித்து வருகிறோம். கிராமத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீட்டுகள் கணக்கெடுப்பு நடந்துள்ளது. இதில் தகுதியில்லாத பயனாளிகள் பலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தகுதியானவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தீர்த்தவாரி உற்சவம் பகண்டை கூட்ரோடு அடுத்த மையனுார் கிராமத்தில் வனப்பகுதியில் அமைந்துள்ள கருடமலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாளுக்கு மாசி மகத்தையொட்டி தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இக்கோயிலுக்கு திருவரங்கம் ரங்கநாதர் ஆண்டுதோறும் மாசி மகத்தில் மையனுார் குன்றில் உள்ள கோவிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த ஆண்டு ஆதிதிருவரங்கம் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்ததையொட்டி, திருவரங்கம் உற்சவர் மையனுார் வரவில்லை. இதனால் கருடமலையில் உள்ள ரங்கநாதருக்கு மட்டும் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
ஆர்ப்பாட்டம் விக்கிரவாண்டியில் த.மு.மு.க., சார்பில் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்து ஜூம்மா மசூதி பள்ளி வாசல் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, த.மு.மு..க., நகர தலைவர் லியாகத்தலி தலைமை தாங்கி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மசூதி முத்தவல்லி அப்துல் சலாம், இமாம்கள் சிராஜூதீன், அன்வாரி, அக்பர் அலி மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சாதிக் பாஷா, த.மு.மு.க., நகர துணைத் தலைவர் சபியுல்லா உட்பட பலர் பங்கேற்றனர்.
இலக்கிய விழா சங்கராபுரத்தில் சங்கை தமிழ் சங்கம் சார்பில் நடந்த இலக்கிய விழாவிற்கு சங்கத் தலைவர் சுப்பராயன் தலைமை தாங்கினார். வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் முன்னிலை வகித்தார். விழாவில், ஒன்றிய அரசின் கல்வி கொள்கை, எகிப்தும், தமிழ்நாடும், உலக தாய் மொழி நாள் குறித்து பேசினர். நிகழ்ச்சியில், ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார்,ஓய்வூதியர் சங்க துணை தலைவர் செல்வராஜ், தமிழ் படைப்பாளர் சங்க தலைவர் வேலு உட்பட பலர் பங்கேற்றனர்.
வேலை நிறுத்தப் போராட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 7வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவை துறையில் பணிபுரியும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்க வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முப்பெரும் விழா மயிலம் அருகே உள்ள கொத்தமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு, தளிர் வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு என நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் தண்டபாணி தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜெயராஜ் பிரபு வரவேற்றார். பெரியதச்சூர் இன்ஸ்பெக்டர் நாகராஜ், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சரஸ்சரநாமம், செயல் அலுவலர் சிவகங்கா ஆகியோ பேசினர். தொடர்ந்து வினாடி, வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
விளையாட்டுப் போட்டி திருவெண்ணெய்நல்லுார் போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விளையாட்டு விழாவிற்கு, தாளாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் விஜயசாந்தி வாசுதேவன் முன்னிலை வகித்தார். உதவி தலைமையாசிரியர் சிவக்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்கள் நேரு யுகேந்திர மாவட்ட தலைவர் சிவசக்திவேல், தாசில்தார் ரகுராமன் போட்டிகளை துவங்கி வைத்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற 350 மாணவர்களுக்கு சான்றிதழும், மெடல் வழங்கப்பட்டது.
காத்திருப்பு போராட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் தவமணி, பிரபாகரன், செம்மலை, ரவி, ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் ஆனந்தகிருஷ்ணன் கோரிக்கை வலியுறுத்தி பேசினார். சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

