/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தந்தை ஓட்டிய ஆட்டோ கிணற்றில் கவிழ்ந்து விபத்து கிரிவலம் சென்று திரும்பியபோது செஞ்சி அருகே விபரீதம்
/
தந்தை ஓட்டிய ஆட்டோ கிணற்றில் கவிழ்ந்து விபத்து கிரிவலம் சென்று திரும்பியபோது செஞ்சி அருகே விபரீதம்
தந்தை ஓட்டிய ஆட்டோ கிணற்றில் கவிழ்ந்து விபத்து கிரிவலம் சென்று திரும்பியபோது செஞ்சி அருகே விபரீதம்
தந்தை ஓட்டிய ஆட்டோ கிணற்றில் கவிழ்ந்து விபத்து கிரிவலம் சென்று திரும்பியபோது செஞ்சி அருகே விபரீதம்
ADDED : பிப் 25, 2024 05:14 AM

செஞ்சி : செஞ்சி அருகே, தந்தை ஓட்டிய ஆட்டோ சாலையோர கிணற்றில் கவிழ்ந்ததில் 2 மகன்கள் நீரில் மூழ்கி இறந்தனர். 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கட்டஞ்சிமேடு ஈச்சூரைச் சேர்ந்தவர் யுவராஜ், 40; ஆட்டோ டிரைவர். இவர், தற்போது சென்னை, நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் குடும்பத்துடன் தங்கி, அங்கு ஆட்டோ ஓட்டி வருகிறார்.
நேற்று முன்தினம் காலை யுவராஜ், மனைவி சத்யா, 35; மகன்கள் பிரகதீஷ்வரன்,11; ஹரிபிரகாஷ்,7; ஆகியோருடன் திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரிவலம் செல்ல தனது ஆட்டோவில் வந்தார்.
செல்லும் வழியில் செஞ்சி அடுத்த கப்பை கிராமத்தைச் சேர்ந்த சத்யாவின் அக்கா அம்மாச்சி, 50; அவரது மகன் ஆகாஷ், 18; ஆகியோரையும் ஆட்டோவில் ஏற்றிச் சென்றார்.
கிரிவலம் சுற்றும் போது சென்னை, குன்றத்துாரைச் சேர்ந்த உறவினர் கலிவரதன் மகன் உத்தரகுமார்,30; அவரது மனைவி பொன்னி, 19; மாமியார் பாஞ்சாலியை சந்தித்தனர்.
கிரிவலம் முடிந்ததும் அவர்களையும் ஏற்றிக் கொண்டு 9 பேராக இரவு 11:00 மணிக்கு ஆட்டோவில் கிளம்பி நள்ளிரவு 12:30 மணியளவில் செஞ்சி அடுத்த புலிவந்தி துர்க்கையம்மன் கோவிலுக்கு வந்தனர்.
அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு, 1:30 மணியளவில் புறப்பட்டு மீண்டும் கப்பையில் உள்ள சத்யாவின் தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை யுவராஜ் ஓட்டினார்.
அதிகாலை 2:00 மணியளவில் கப்பை கிராமத்தை நெருங்கும் போது, சாலை திருப்பத்தில், இரண்டரை அடி உயரமுள்ள தடுப்புச் சுவரில் ஆட்டோ மோதி துாக்கி வீசப்பட்டு சாலையோரம் இருந்த விவசாய கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கியது. இதில் 9 பேரும் நீரில் மூழ்கினர்.
நீச்சல் தெரிந்த பெரியவர்கள் நீந்தி மேலே வந்துள்ளனர்.
நீச்சல் தெரியாதவர்களை ஆகாஷ் காப்பாற்றியுள்ளார். ஆனால், சிறுவர்கள் பிரகதீஷ்வரன், ஹரிபிரகாஷ் ஆகியோர் ஆட்டோ அடியில் சிக்கிக் கொண்டதால், அவர்களை ஆகாஷால் மீட்க முடியவில்லை.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செஞ்சி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பிரகதீஷ்வரன், ஹரிபிரகாஷ் ஆகியோரது உடல்களை மீட்டனர்.
இந்த விபத்தில் காயமடைந்த யுவராஜ், சத்யா, உத்தரகுமார், பொன்னி, பாஞ்சாலி ஆகியோர் செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.