ADDED : செப் 02, 2025 09:57 PM

விழுப்புரம்; விழுப்புரத்தில் தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரயில் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, செயலாளர்கள் மோசஸ், வீரராகவன் ஆகியோர் தலைமை தாங்கினர். தலைவர்கள் கமலக்கண்ணன், செல்வம் முன்னிலை வகித்தனர்.
சி.ஐ.டி.யூ., தலைவர் மூர்த்தி, முன்னாள் தலைவர் சார்லஸ் ஆகியோர் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர்.
திருச்சி மண்டல தலைவர் சிவக்குமார், துணை பொது செயலாளர் சரவணன், கோட்ட துணை செயலாளர்கள் பலராம், அழகிரி, வேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள கேரளா, மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை ஆகிய இடங்களில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களை சொந்த ஊருக்கு பணியிட மாற்றம் செய்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோட்ட துணை செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.