ADDED : அக் 03, 2025 02:11 AM
விழுப்புரம்; விழுப்புரம் அருகே இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் மீது வழக்குப் பதிந்து, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த ஒட்டன்காடுவெட்டியைச் சேர்ந்தவர் சங்கர், 55; அதே பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 54; இவரிடம் 6 ஆண்டுகளுக்கு முன், 1.50 லட்சம் ரூபாயை சங்கர் கடன் வாங்கி கல்பட்டைச் சேர்ந்த அமல்ராஜ், 42; என்பவருக்கு கொடுத்துள்ளார்.அமல்ராஜ் அந்த பணத்தை திருப்பி கொடுக்காததால், சங்கர் தனது டிராக்டரை ரவிச்சந்திரனிடம் கொடுத்து வைத்திருந்தார்.
அந்த டிராக்டரை, நேற்று முன்தினம் சங்கர் மகன் சந்துரு, 25; என்பவர் ரவிச்சந்திரன் வீட்டிலிருந்து எடுத்துச் சென்றுள்ளார். இதனால், இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், சங்கர், ரவிச்சந்திரன் உட்பட 8 பேர் மீது காணை போலீசார் வழக்குப் பதிந்து ரவிச்சந்திரன், ராஜதுரை, 28; சங்கர், சந்துரு ஆகிய 4 பேரை கைது செய்தனர்.