திண்டிவனம் சிப்காட் பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்படுமா?மல்லிகை விளைச்சல் அதிகம் இருப்பதால் விவசாயிகள் கோரிக்கை
திண்டிவனம் சிப்காட் பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்படுமா?மல்லிகை விளைச்சல் அதிகம் இருப்பதால் விவசாயிகள் கோரிக்கை
UPDATED : ஆக 07, 2026 05:17 PM
ADDED : ஆக 07, 2026 05:01 PM

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் மல்லிகை உள்ளிட்ட பூக்கள் பயிரிடப்படுவதால், சிப்காட் பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் மொத்த நிலப்பரப்பில் 40 சதவீதம் நெல் சாகுபடியும், மீதமுள்ள நிலப்பரப்பில் பயிறு வகைகள் மற்றும் பணப்பயிரான கரும்பு உள்ளிட்டவைகள் சாகுபடி செய்யப்படுகிறது.
மாவட்டத்தைப் பொறுத்த வரை கரும்பைக் கொண்டு தயாரிக்கப்படும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை தயார் செய்வதற்கான கரும்பு ஆலைகள் அதிகம் உள்ளது.
மதுரை, தேனி, நிலக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைத் தவிர்த்து, விழுப்புரம் மாவட்டத்தில் அதிகளவில் பூக்கள் பயிரிடப்படுகிறது. அதன்படி மாவட்டத்தில், சம்பங்கி 213 ஏக்கரிலும், மல்லி, முல்லை, கனகாம்பரம், கோழிக்கொண்டை உள்ளிட்ட மலர் வகைகள் 1071 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.
இம்மாவட்டத்தில் மயிலம், வீடூர், ஒலக்கூர், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மல்லி அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இதேபோல் விக்கிரவாண்டி, வீடூர் பகுதிளில் கனகாம்பரமும், மரக்காணம், ஒலக்கூர் பகுதிகளில் கோழிக்கோண்டையும், மயிலம், விக்கிரவாண்டி, ஒலக்கூர், தீவனுார் பகுதிகளில் அதிக அளவில் சம்பங்கியும் பயிரிடப்படுகிறது.
திண்டிவனம் அடுத்த சலவாதி, பட்டணம், ஊரல் பகுதிகளில் குண்டு மல்லி, மஞ்சள் சாமந்தி எனவும், தமிழகத்தில் மதுரைக்கு அடுத்து அதிகளவில் திண்டிவனம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து மல்லிகைப் பூக்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
பூக்களை பயிரிடும் விவசாயிகள், திண்டிவனம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் மல்லிகைப் பூவிற்கு மதிப்புக் கூட்டும் தொழிலாக வாசனை திரவிய தொழிற்சாலையை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மல்லிகைப் பூவில் இருந்து 0.14 முதல் 0.19 சதவீதம் அளவிற்கு வாசனைச் சாறு பெற முடியும் என்பது வேளாண் பல்கலைக்கழக தொழில்நுட்ப தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மூலம் ஆண்டுக்கு 80 லட்சம் கிலோ மல்லி, சம்பங்கி மற்றும் ஜாதி மல்லி பூக்கள் வாசனை திரவியம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
திண்டிவனத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்பட்டால், விவசாயிகளுக்கு மல்லிகைப் பூவிற்கு நிலையான விலை கிடைக்கும். மல்லிகையை மூலப்பொருளாக கொண்டு, மதுரையில் உள்ளது போல், திண்டிவனம் சிப்காட்டில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க போதுமான அனைத்து வசதிகளும் உள்ளது. வாசனை திரவிய தொழிற்சாலை அமையும் பட்சத்தில் மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் உருவாகும்.
மதுரை உள்ளிட்ட இடங்களில் வாசனை திரவிய தொழிற்சாலைகள் உள்ளது போல், திண்டிவனம் சிப்காட் வளாகத்திலும் மல்லிகைப் பூக்களைக் கொண்டு வாசனை திரவிய தொழிற்சாலையை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
