/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாலிதீனை உண்ணும் கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகுது; உணவுக் கழிவோடு சேர்த்து குப்பையில் கொட்டுவதால் விபரீதம்
/
பாலிதீனை உண்ணும் கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகுது; உணவுக் கழிவோடு சேர்த்து குப்பையில் கொட்டுவதால் விபரீதம்
பாலிதீனை உண்ணும் கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகுது; உணவுக் கழிவோடு சேர்த்து குப்பையில் கொட்டுவதால் விபரீதம்
பாலிதீனை உண்ணும் கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகுது; உணவுக் கழிவோடு சேர்த்து குப்பையில் கொட்டுவதால் விபரீதம்
ADDED : ஆக 30, 2024 05:46 AM

விருதுநகர் : மாவட்டத்தின் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில் கால்நடைகள் பாலிதீனை உண்பது அதிகரித்து வருகிறது.
கால்நடைகள் வயிற்றில் இருந்து கிலோ கணக்கில் பாலிதீன் உள்ளிட்ட கழிவுகள் எடுக்கப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. இதனால் அவற்றின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகி நோய்வாய்ப்படுகின்றன.
உணவுக்கழிவோடு பாலிதீன் பையில் குப்பை கொட்டுவதால் இந்த பிரச்னை தொடர்கிறது. உள்ளாட்சிகளின் கட்டுப்பாடும், உரிமையாளர்களின் நடவடிக்கையும் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும்.
நகர்ப்பகுதிகளில் குடியிருப்புகள் பெருகும் அளவுக்கு பாலின் தேவையும் அதிகம் உள்ளது. இதனால் ஆவின், தனியார் பால் போக வீடுகளில் மாடு வளர்ப்போரும் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு கால்நடை வளர்ப்போரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். சிவகாசி மாநகராட்சி, விருதுநகர், ராஜபாளையம் நகராட்சிகளில் இவ்வாறு வளர்க்கப்படும் கால்நடைகள் பாலித்தீனை உண்பது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதன் உரிமையாளர்கள் சரிவர பராமரிக்காமல் வெளியே விட்டு விடுவதாலும், உணவு தேவைக்காகவும் அவை ரோட்டோரங்களில் உள்ள பாலித்தீன் குப்பையை உண்கின்றன. பொதுவாக கால்நடைகள் பாலித்தீனை விரும்பி உண்பதில்லை. மக்கள் வீசும் குப்பையில் உணவு பொட்டலங்கள் இருந்தாலோ, அழுகிய பழங்கள் இருந்தாலோ அதை உண்ணும் கால்நடைகள் பாலித்தீனை சேர்த்தும் உண்கின்றன. இதனால் அந்த பாலிதீன் குப்பை கால்நடைகள் வயிற்றிலே தங்கி அவற்றிற்கு நோய் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது நகர்ப்பகுதிகளில் கட்டுப்பாடு இன்றி பெருகி வருவதால் மக்கள் பலர் பால் வாங்க அச்சப்படும் சூழல் உள்ளது.
உரிமையாளர்களும் கால்நடைக்கு சரிவர உணவளிக்காமல் மேய்ச்சல் என்ற பெயரில் அவற்றை ரயில்வே தண்டவாளங்கள் அருகே, வறண்ட நீர்நிலைகள், குப்பை பாயின்டுகளில் போன்றவற்றிற்கு கூட்டி செல்கின்றனர். இவ்வாறு உண்ணும் கால்நடைகள் பாதிப்பை சந்தித்த பிறகே உரிமையாளர்கள் திருந்துகின்றனர்.
மாநகராட்சி, நகராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை பின்பற்றப்பட்ட பின்னும் தற்போது வரை பிளாஸ்டிக் குப்பை பொதுவெளியில் கிடப்பது குறையவில்லை. இதுவும் கால்நடைகளை பாதிக்க ஒரு காரணமாகிறது.
கால்நடை மருத்துவர் கார்த்திக் கூறியதாவது: கால்நடைகள் பாலிதீனை உண்ணும் போது உணவுப்பாதையில் அடைப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படாத பட்சத்தில் அவற்றில் வயிற்றில் உள்ள நான்கு அறைகளில் ஒன்றான ரூமனில் அவை அப்படியே தங்கி விடும். தொடர் குடல் இயக்கத்தின் போதும் அவை வெளிவராது. ஆனால் ரூமனிலும் அதிகமாகி விட்டால் வயிறு ஊதும்.
சாணம் போடாது. உணவு எடுத்து கொள்ளாது. புரோப் என்ற குழாய் வழி சிகிச்சை மூலமும் அகற்ற முடியும். கழிவின் எடை அதிகம் இருந்தால் ரூமனாட்டமி என்ற அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடியும். இது போன்று பாலிதீனை உண்பது கால்நடைகளுக்கு தான் கேடாக முடிகிறது, என்றார்.