/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெயின்டர் கொலையில் 3 வாலிபர்கள் கைது
/
பெயின்டர் கொலையில் 3 வாலிபர்கள் கைது
ADDED : அக் 07, 2025 08:44 AM
விருதுநகர்: விருதுநகரில் தந்தை, மகனை கத்தியால் குத்திய முன்விரோதத்தில் நேற்று முன்தினம் குல்லுார் சந்தை அணைப்பகுதியில் பெயின்டர் ஸ்ரீ ஜெய்சந்திரகுமாரை 28, குத்திக்கொலை செய்த நித்தியகுமார் 21, கோகுலரமணன் 21, சஞ்சித் 21, ஆகியோரை சூலக்கரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே குல்லுார்சந்தை இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் ஸ்ரீ ஜெய்சந்திர குமார். கடந்தாண்டு ஆக., 25ல் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மூர்த்தி 48, அவரது மகன் கீர்த்தி வாசன் 23, ஆகியோரை கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட தகராறில் ஸ்ரீ ஜெய்சந்திரகுமார் கத்தியால் குத்தினார். இவ்வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுஜாமினில் வெளியே வந்தார்.
நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு குல்லுார்சந்தை அணைப்பகுதியில் நண்பர்களுடன் ஸ்ரீஜெய்சந்திரகுமார் பேசிக் கொண்டிருந்தார். அங்கு நித்தியகுமார், கோகுலரமணன், சஞ்சித் ஆகியோர் வந்தனர். இவர்கள் மூர்த்தியின் உறவினர்கள். மூர்த்தி, அவரது மகனை கத்தியால் குத்தியதை மூவரும் தட்டி கேட்டு தகராறில் ஈடுபட்டனர். பின் அவர்கள் ஸ்ரீ ஜெய்சந்திரகுமாரை கத்தியால் குத்திக்கொலை செய்தனர். மூவரையும் சூலக்கரை போலீசார் நேற்று கைது செய்தனர்.