/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
3 ஆண்டுகளாக செயல்படாத திருமண மண்டபம்
/
3 ஆண்டுகளாக செயல்படாத திருமண மண்டபம்
ADDED : பிப் 04, 2024 04:18 AM

காரியாபட்டி : மல்லாங்கிணர் பேரூராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபம் 3 ஆண்டுகளாக செயல்பாட்டிற்கு வராதது, மல்லாங்கிணரிலிருந்து சூரம்பட்டி வழியாக துலுக்கன்குளம் செல்லும் ரோடு படு மோசமாக இருப்பது, பாப்பா ஊருணியிலிருந்து கழிவு நீரை வெளியேற்ற அமைக்கப்பட்டு வரும் பாதாள சாக்கடை பணி சரிவர திட்டமிடாததால் குடியிருப்புகளுக்குள் புகும் கழிவு நீரால் மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
மல்லாங்கிணர் பெருமாள் கோயிலில் திருமணம் நடத்துபவர்களுக்கு வசதியாக அருகிலே பேரூராட்சி சார்பாக திருமண மண்டபம் கட்டப்பட்டது. வாடகையாக ரூ. 3 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. குறைவான வாடகையால் பெரும்பாலானோர் விசேஷங்களை பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடத்தினர். இந்நிலையில் மராமத்து பணிக்காக மண்டபம் வாடகைக்கு விடுவதை நிறுத்தி, பணிகளை மேற்கொண்டனர்.
பணிகள் முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு விடவில்லை. தற்போது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மண்டபத்தில் விசேஷங்களை நடத்த முடியாமல் போனது. மல்லாங்கிணரிலிருந்து சூரம்பட்டி வழியாக துலுக்கன்குளத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன் தார் ரோடு போடப்பட்டது. தற்போது சேதம் அடைந்து குண்டும், குழியுமாகி, ஜல்லிக் கற்களாக உள்ளன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ் இயங்கவில்லை.
பாப்பா ஊருணியில் தேங்கும் கழிவு நீரை வெளியேற்ற பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. சரிவர திட்டமிடாததால் மீண்டும் ஊருணிக்கே செல்கிறது. தற்போது வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து, கொசு உற்பத்தியாகி, துர்நாற்றம் வீசுகிறது. மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.