/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.32.5 கோடியில் கட்டுமான பணி
/
சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.32.5 கோடியில் கட்டுமான பணி
சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.32.5 கோடியில் கட்டுமான பணி
சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.32.5 கோடியில் கட்டுமான பணி
ADDED : அக் 10, 2025 02:57 AM

சிவகாசி: சிவகாசி அரசு மருத்துவமனையில் மத்திய அரசு சார்பில் ரூ.32.5 கோடியில் நவீன தீவிர சிகிச்சை பிரிவு, தாய் சேய் நல மையம் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 90 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பு பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிவகாசி அரசு மருத்துவமனையில் மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கம் , ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.23.75 கோடியில் 50 படுக்கைகள் கொண்ட நவீன தீவிர சிகிச்சை பிரிவு, ரூ.8.79 கோடியில் தாய் சேய் நல மையம் கட்டுமான பணிக்கு 2024 பிப். 25 ல் பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்த புதிய கட்டடம் 70,321 சதுர அடி பரப்பளவில் தரைத்தளத்துடன் சேர்த்து மொத்தம் 7 தளங்களை கொண்டதாக கட்டப்பட்டு வருகிறது.
இதில் மருத்துவ ஆய்வகம், டிஜிட்டல் எக்ஸ்ரே, யுஎஸ்ஜி, எக்ஸ்லாம்சியா ஆய்வகம், 26 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு, தாய்ப்பால் வங்கி, மகப்பேறு சிகிச்சை பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக 4 அறுவை சிகிச்சை அரங்கு ஆகியவை அமைய உள்ளது.
இந்த கட்டுமான பணி நிறைவடைந்தால் சிவகாசி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 139 படுக்கை வசதிகள் , பல்வேறு நவீன வசதிகள் கொண்டதாக விரிவடையும். 18 மாதங்களில் கட்டுமான பணிகள் முடிந்து நவம்பரில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்த நிலையில், குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே கட்டுமான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
அதன்படி அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் மருத்துவமனையில் காலி பணியிடங்களை நிரப்புவதுடன் கூடுதல் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.