/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மண்மேவிய நீர் வரத்துக்கால்வாய், மதகுகள் சேதம்
/
மண்மேவிய நீர் வரத்துக்கால்வாய், மதகுகள் சேதம்
ADDED : ஜூலை 17, 2025 12:21 AM
சாத்துார்: சாத்துார் வேப்பிலை பட்டி கண்மாய்க்கு நீர்வரத்துக் கால்வாய்கள் மண் மேவியதால் முழுமையான அளவில் தண்ணீர் வருவதில்லை. மேலும் மதகுகள் சேதத்தால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
வேப்பிலை பட்டி கண்மாயில் 3 மதகுகள் உள்ளன. பெரிய கண்மாய் நிரம்பி மறுகால் பாயும் போது சிறிய கண்மாய் நிரம்பும்.இந்த இரு கண்மாய் பாசனங்களின் மூலம் இ முத்துலிங்கபுரம்,சக்கம்மாள்புரம் வேப்பிலைப்பட்டி ஆகிய கிராமத்தில் உள்ள விவசாயிகள் பாசன வசதி பெற்று வந்தனர்.
கன்னிசேரி புதுார், கோவில் புலி குத்தி, வெங்கான் நாயக்கன்பட்டி, சின்னக்காமன் பட்டி பகுதியில் பெய்து வரும் மழைநீர் முழுவதும் வேப்பிலைப்பட்டி பெரிய கண்மாயை வந்து அடைகின்றன. இந்த கண்மாய் நீர்ப்பாசனம் மூலம் 22 ஹெக்டேர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுகிறது. நெல் ,கம்பு ,சோளம் என பல்வேறு பயிர்கள் விளைந்து வந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக கண்மாயின் நீர்வரத்து ஓடைகள் துார்வாரப்படாததால் கண்மாய் முழுமையான அளவில் நிரம்ப வில்லை.
மேலும் கண்மாயில் உள்ள மூன்று மதகுகளும் பழுதான நிலையில் உள்ளது.இந்த மதகுகள் மூலம் தண்ணீர் செல்லும் பாசன கால்வாயும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. கண்மாய் பாசனம் மூலம் விவசாய பணிகள் செய்த விவசாயிகள் தற்போது கிணற்று பாசனம் மூலம் சிறிதளவு விவசாயம் செய்து வருகின்றனர். பலர் தங்கள் நிலங்களை மானாவாரி நிலமாக மாற்றி மக்காச்சோளம் கம்பு உள்ளிட்ட பயிர்களை விளைவித்து வருகின்றனர்.
இந்த பயிர்களையும் காட்டு பன்றிகள் முயல்கள் கடித்து தின்று சேதப்படுத்தி விடுவதால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். கண்மாயில் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்றுவதோடு மதகுகளை சீரமைக்கவும் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் வேண்டும்.

