ADDED : பிப் 20, 2025 07:00 AM
திருச்சுழி: திருச்சுழி அருகே மறவர் பெருங்குடி - பந்தல்குடி செல்லும் ரோடு கிடங்காக இருப்பதால் வாகனங்கள் செல்லும்போது விபத்துக்கள் ஏற்படுகிறது.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது மறவர் பெருங்குடி. கமுதியில் இருந்து மறவர் பெருங்குடி ரோடு வழியாக பந்தல்குடி, சாத்துார் செல்லலாம். மேலும் இந்த ரோட்டை பயன்படுத்தி இருக்கன்குடி, கமுதிவிலக்கு தும்முசின்னம்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல முடியும். 25 ஆண்டுகளாக மறவர் பெருங்குடியில் இருந்து அரை கி.மீ., வரை உள்ள ரோடு கிடங்காகவும், மேலும் பள்ளமுமாக உள்ளது.
இதனால் 15 ஆண்டுகளாக அரசு பஸ்கள் இந்த ரோட்டை பயன் படுத்துவது இல்லை. மழை காலமானால் ரோடு மோசமான நிலையில் இருக்கும். சேதமடைந்த ரோட்டை கடந்து செல்ல முடியாமல் பந்தல்குடி,இருக்கன்குடி, சாத்தூர் உள்ளிட்ட ஊர்களுக்கு அருப்புக்கோட்டை வழியாக 30 கி.மீ., சுற்றி செல்ல வேண்டி உள்ளது.
இந்த ரோடு வழியாக 4 நாட்களுக்கு முன்பு ஷேர் ஆட்டோவில் சிந்தலகரை கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் போது கிடங்கான பகுதியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதுபோன்று வாகன விபத்துக்கள் இந்த பகுதியில் தொடர்ந்து நடக்கிறது. நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரோட்டை புதியதாக அமைக்க அதிகாரிகள் அக்கறை காட்டுவது இல்லை. மாவட்ட நிர்வாகம் சேதம் அடைந்த ரோட்டை புதுப்பிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

