/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நகராட்சி ஓடைகள் துார்வாராததால் சுகாதாரக்கேடு --நீர் நிலைகள் மீண்டும் மாசு
/
நகராட்சி ஓடைகள் துார்வாராததால் சுகாதாரக்கேடு --நீர் நிலைகள் மீண்டும் மாசு
நகராட்சி ஓடைகள் துார்வாராததால் சுகாதாரக்கேடு --நீர் நிலைகள் மீண்டும் மாசு
நகராட்சி ஓடைகள் துார்வாராததால் சுகாதாரக்கேடு --நீர் நிலைகள் மீண்டும் மாசு
ADDED : மே 17, 2025 12:44 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி ஓடைகள் இருந்து வருவதால் நீர் தேக்கும் கண்மாய்கள் சாக்கடை குளமாக மாறி சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தியும் நோக்கம் நிறைவேறாததால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
ராஜபாளையம் நகராட்சி சஞ்சீவி மலை, கொத்தங்குளம் அருகே உள்ள மலையில் தொடங்கி மழை நீர் ஓடைகள், வடிகால்கள் வழியே மழைக்காலங்களில் வெளியேறும் தண்ணீர் கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு சென்று சேகரமாகிறது.
இவற்றில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பு ஏற்பட்டு சாக்கடை குளமாக மாறிவிட்டது. வருவாய் துறை, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஓடைகள் நீண்ட காலமாக பராமரிப்பின்றி மண் திட்டுக்களால் அடைப்பு ஏற்பட்டு, செடி கொடிகள், புதர்களாக மாறி தடை ஏற்படுத்துகிறது.
இதனால் மழைக்காலங்களில் ஏற்படும் தடையால் திசை மாறி தெருக்களில் பாய்ந்து வருகிறது. மற்ற நேரங்களில் சாக்கடை அதிக அளவு தேங்குவதால் சுகாதார கேடு, கொசு உற்பத்தி, விஷ ஜந்துக்கள் கூடாரமாக மாறி உள்ளது. இது தவிர ஓடைகளில் தொடர்ந்து கொட்டப்படும் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு பாதிப்பு தொடர்கிறது.
அம்ருத் திட்டத்தில் மழை நீர் வடிகால்களில் சாக்கடை கலப்பை தடுக்க கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் ராஜபாளையம் நகராட்சியில் செயல்படுத்தியும் ஏற்கனவே சஞ்சீவி மலையில் மற்றும் அதன் துணைப் பகுதியில் இருந்து மொத்தம் சுமார் 15 கி., துாரத்திற்கு போலீஸ் குடியிருப்பு, மலையடிப்பட்டி திட்டச்சாலை, ஜோதி நகர் முதல் இந்திரா நகர், முனியம்மன் பொட்டல் முதல் சங்கரன்கோவில் ரோடு, நேரு சிலை முதல் அழகத்தான் குளம் ரோடு என 20 மழைநீர் வடிகால்களை துார்வார செலவு ரூ.245 கோடி என விரிவான திட்ட வரைவு அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டு நிதிக்கு எதிர்பார்த்து உள்ளது.
இந்நிலையில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து கழிவுநீர் வடிகால்களில் கலக்க வாய்ப்பு இல்லாத நிலையில் ஏற்கனவே பல ஆண்டுகளாக ஓடைகளில் மண்மேடுகள், சாக்கடை கழிவுகள் பொதிந்து காணப்படுவதால் மழைக்காலங்களில் சுத்தமான தண்ணீர் கண்மாய்களுக்கு சேராமல் மீண்டும் கழிவு நீர் கலக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு தொடர் வேதனை
-ராமச்சந்திர ராஜா, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்: சுத்தமான கண்மாய் தண்ணீரை ஆதாரமாக வைத்து விவசாயம் செய்த நிலை காணாமல் போய் வருகிறது. பாதாள சாக்கடை செயல்பாட்டிற்கு வந்தவுடன் இந்நிலை மாறி விடும் என நினைத்த போதும் ஏற்கனவே வடிகால் ஓடைகளில் உள்ள சாக்கடைகளை அகற்றாததால் பெரியாதி குளம், கொண்டநேரி, புளியங்குளம், கடம்பன்குளம், பிரண்டகுளம் கண்மாய்கள் அதே பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு தொடர் வேதனை தான்.
வீடுகளுக்குள் கழிவு நீர்
-சுப்பிரமணியன், குடியிருப்புவாசி: லேசான மழை பெய்தாலே மண் மேவியுள்ள சாக்கடைகள் மழை நீரில் கலந்து வீடுகளுக்கும், இந்திரா நகர் போன்ற மழை நீர் வடிகாலின் கடைசி பகுதிகளில் சிக்கலை ஏற்படுத்துகிறது. சாக்கடை அடைப்பினால் டெங்கு உயிரிழப்பிற்கு முன்னோடியான ராஜபாளையம் நகராட்சி மீண்டும் பழைய கெட்ட பெயரை பெறுவதற்குள் வடிகால்களை துார்வார வேண்டும்.
தீர்வு
பொதுப்பணித்துறை, வருவாய் துறையின் கீழ் வரும் மழைநீர் வடிகால்கள் ஓடைகளை முறையாக கணக்கீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குடியிருப்பு வாசிகள் ஓடைகளில் குப்பைகள் கொட்டுவதை கண்காணித்து அபராதம் விதிக்கவும், நீர் வரத்து ஓடைகளில் கடந்து செல்ல பாதை என்ற பெயரில் தேவையின்றி தடுப்புகள் ஏற்படுத்த ஆட்சேபனை தெரிவிப்பதுடன், தொடர் இடைவெளிகளில் புதர்கள் வளர்ந்து பாதிப்பதை அகற்ற உடனடி அனுமதி வழங்க வேண்டும்.
நகராட்சி, பொதுப்பணித்துறை, வருவாய் துறை இணைந்து இப்பணிகளை முன்னெடுக்க வேண்டும்.