/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மல்லாங்கிணரில் கல்வெட்டு கண்டெடுப்பு
/
மல்லாங்கிணரில் கல்வெட்டு கண்டெடுப்பு
ADDED : நவ 12, 2025 11:57 PM

விருதுநகர்: மல்லாங்கிணரில் 123 ஆண்டுகளுக்கு முன்பு ஊர்மக்களுக்கு தர்மமாக கருங்கல்லான தண்ணீர் கிணறு அமைத்துக் கொடுத்த தகவல் கூறும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மல்லாங்கிணர் கல்குறிச்சி ரோட்டில் கருங்கற்களால் சதுர வடிவில் கட்டப்பட்ட கிணற்றின் மேல் விளிம்பில் ஒரு கல்வெட்டு இருப்பதை, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நுார்சாகிபுரம் சு.சிவகுமார் ஆகியோர் கண்டெடுத்துள்ளனர்.
இதுபற்றி அவர்கள் கூறியதாவது: கிணற்றின் விளிம்பில் இரண்டு வரியில் உள்ள கல்வெட்டு, கலியுகம் 5002, பிலவ ஆண்டு மாசி மாதம், ஆங்கில வருடம் 1902ல் மல்லாங்கிணர் க.நாகம நாயக்கர் குமாரர் கணக்கு குப்புசாமி நாயக்கர் ஊர் மக்களின் பயன்பாட்டுக்காக தர்மமாக கருங்கற்களால் ஆன இக்கிணற்றை அமைத்துக் கொடுத்ததாகத் தெரிவிக்கிறது. இதில் கலி, தமிழ், ஆங்கில ஆண்டுகள் குறிப் பிடப்பட்டுள்ளன.
கி.பி.13ம் நூற்றாண்டில், குலசேகரப்பாண்டியன் ஆட்சியில் மக்களின் பயன்பாட்டுக்காக ஒரு துலாக்கிணறு விழுப்பனுாரில் தோண்டப்பட்டது. இம்மாவட்டம் முழுவதும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட சமயங்களில் இத்தகைய கிணறு, குளங்களை தனி நபர்களும் அமைத்துக் கொடுத்துள்ளனர்.
நரிக்குடியில் உலகப்பன் சேர்வைக்காரர், குண்டுகுளத்தில் கருப்பணக்குடும்பன் குளங்களையும், சோலைசேரியில் பெத்தநல்லுநாயக்கர் எண்கோண வடிவ கிணற்றையும் உபயமாகச் செய்துள்ளனர், இவ்வாறு அவர்கள் கூறினர்.

