/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆய்வுப் பணிகளை வலைத்தளங்களில் வெளியிடும் அதிகாரிகள் அரசு ஊழியர்கள் வேதனை
/
ஆய்வுப் பணிகளை வலைத்தளங்களில் வெளியிடும் அதிகாரிகள் அரசு ஊழியர்கள் வேதனை
ஆய்வுப் பணிகளை வலைத்தளங்களில் வெளியிடும் அதிகாரிகள் அரசு ஊழியர்கள் வேதனை
ஆய்வுப் பணிகளை வலைத்தளங்களில் வெளியிடும் அதிகாரிகள் அரசு ஊழியர்கள் வேதனை
ADDED : ஏப் 10, 2025 01:17 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:தமிழகத்தின் பல்வேறு அரசுத் துறை உயர் அதிகாரிகள் தங்கள் துறை ரீதியான ஆய்வுப் பணிகளை இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதால் பாதிக்கப்படும் கீழ்நிலை அரசு அலுவலர்கள் ,ஊழியர்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.
தமிழக அரசு நிர்வாகத்தில் ஒவ்வொரு துறையிலும் கடைநிலை ஊழியர் முதல் தலைமை அதிகாரி வரை அனைவருக்கும் பல்வேறு நடத்தை விதிமுறைகள் உள்ளன.
அரசின் அனுமதி இன்றி அரசியல் கட்சி பணிகள், தேர்தல் பணிகளில் ஈடுபடக்கூடாது.
அரசு துறைகளில் தலைமை பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் நேரடி கள ஆய்வு தொடர்பான செய்திகளை செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் வழங்குவது நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்ஸ்டாகிராம், யூடியூப், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இளம் உயர் அதிகாரிகள் தங்களது சொந்த செயல்பாடுகளை பதிவிட்டு வருகின்றனர்.
கள ஆய்வு செய்யும் போது அடுத்த நிலை அதிகாரிகளை மக்கள் முன்னிலையில் திட்டுவது, உண்மை தன்மையை முழுவதுமாக தெரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை யூடியுப், இன்ஸ்டாகிராமிலும் வெளியிடுகின்றனர். குறிப்பாக இளம் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளிடம் இப்பழக்கம் அதிகம் உள்ளது.
தற்போதைய அரசியல் சூழலில் பல்வேறு பணிகள் செய்வதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதுகுறித்து தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கு நன்றாக தெரியும். இருப்பினும் மக்கள் மத்தியில் தங்களது இமேஜை அதிகரித்துக் கொள்வதற்காக இவ்வாறு செயல்படுகின்றனர். இதனால் அடுத்த நிலை அதிகாரிகளில் இருந்து கடைநிலை ஊழியர்கள் வரை விரக்தியடைகின்றனர். குறிப்பாக ஓய்வு பெறும் வயதுடைய அதிகாரிகள், ஊழியர்கள் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகி வருகின்றனர். உயர் அதிகாரிகளின் இத்தகைய நடத்தை விதிகளுக்கு மாறான செயல்பாடுகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த அறிவுறுத்த வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதில் அரசு ஊழியர் சங்கங்கள் அமைதியாக இருப்பதாகவும் ஆதங்கம் தெரிவித்தனர்.