ADDED : மார் 02, 2024 05:08 AM

சாத்துார் : சாத்துார் 3வது வார்டில் ரோடு,வாறுகாலின்றி கழிவுநீர் தேக்கம், மதுரை ரோட்டில் திறக்காத கழிப்பறையால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நம்மாழ்வார் காம்பவுண்ட், இ.எஸ்.ஐ. மருத்துவமனை, சங்கரேஸ்வரி காம்பவுண்ட், வெம்பக்கோட்டை ரோடு படந்தால் ரோடு நான்கு வழி சாலை சந்திப்பு ,மதுரை பஸ் ஸ்டாப் கிழக்கு தெரு, ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது 3வது வார்டு .
இ.எஸ்.ஐ., மருத்துவமனை உள்ள நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் சாக்கடை செல்ல வசதி இல்லை மருத்துவமனை முன்பு சாக்கடை திறந்து வெளியில் ஓடுவதால் நோயாளிகள் சாக்கடையில் கால் வைத்து நடந்து மருத்துவமனைக்குள் செல்லும் நிலை உள்ளது.
சங்கரேஸ்வரி காம்பவுண்ட் பகுதியில் மழைக்காலத்தில் நான்கு வழிச்சாலையில் இருந்து பெருக்கெடுத்து வரும் மழைநீர் முழுவதும் காம்பவுண்டில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது. இதனால் காம்பவுண்டில் வசிப்பவர்கள் மழைக்காலத்தில் வீட்டில் தங்க முடியாத நிலை உள்ளது.
மதுரை பஸ் ஸ்டாப் கிழக்கு தெரு பகுதியில் போதுமானதெரு விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரத்தில் இந்தபகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
வார்டில் உள்ள வாறுகால்களை சுத்தம் செய்வதற்கு பணியாளர்கள் வராததால் கழிவுகள் ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசும் நிலை உள்ளது.
மதுரை பஸ் ஸ்டாப் முன்பு உள்ள வேன் ஸ்டாண்ட் பகுதியை பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் லோடு வேன்களை நிறுத்தும் டிரைவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
குடிநீர் திட்ட பணிக்காகவும் பாதாள சாக்கடை திட்டத்திற்காகவும் பள்ளம் தோண்டப்பட்டதால் ரோடுகள் குண்டு குழியுமாக காணப்படுகின்றன. மதுரை பஸ் ஸ்டாப்பில் காலை மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

