/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு, தீப்பட்டி, அச்சு தொழில்களை உருவாக்கி வெற்றி கண்டது கரிசல் பூமி
/
பட்டாசு, தீப்பட்டி, அச்சு தொழில்களை உருவாக்கி வெற்றி கண்டது கரிசல் பூமி
பட்டாசு, தீப்பட்டி, அச்சு தொழில்களை உருவாக்கி வெற்றி கண்டது கரிசல் பூமி
பட்டாசு, தீப்பட்டி, அச்சு தொழில்களை உருவாக்கி வெற்றி கண்டது கரிசல் பூமி
ADDED : டிச 15, 2024 05:49 AM

சிவகாசி: நூறு ஆண்டுகளுக்கு முன்பே பட்டாசு, தீப்பட்டி, அச்சு என தொழில்களை உருவாக்கி வெற்றி கண்டது கரிசல் பூமி., சிவகாசியில் நடந்த கரிசல் இலக்கிய திருவிழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
சிவகாசியில் மாவட்ட நிர்வாகம், கரிசல் இலக்கிய கழகம் இணைந்து நடத்திய கரிசல் திருவிழா நே ற்று துவங்கியது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். கரிசல் இலக்கியக் கழகச் செயலாளர் மருத்துவர் அறம் வரவேற்றார்.
கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில், உலகம் முழுவதும் வட்டார இலக்கியத்திற்கு என்று தனி மதிப்பு உள்ளது. எளிய மக்களின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்வது வட்டார இலக்கியங்கள் தான். தமிழில் 70 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதப்பட்டு வரும் வட்டார இலக்கியம் கரிசல் இலக்கியம். பாரதியார் தொடங்கி இன்று வரை தொடர்ந்து கரிசல் இலக்கியம் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. இதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்காகவே இந்த விழா நடத்தப்படுகிறது, என்றார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், இலக்கண வளர்ச்சியும், இலக்கிய செழுமையும் கொண்ட மொழி தமிழ். அசோகர் காலத்திற்கு முன் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தனக்கென்று தனி எழுத்து முறையை பெற்ற இனம் தமிழ் இனம். கீழடி, சிவகளை என தொல்லியல் ஆய்வில் நாம் எங்கு சென்று பார்த்தாலும் ஆதனும், சாத்தனும் அங்கு இருக்கிறார்கள். மொழியின் வளர்ச்சியில் சங்க இலக்கியம், 8-ம் நுாற்றாண்டில் பக்தி இலக்கியம் என உருமாறி இன்று மரபுக்கவிதை, புதுக்கவிதை என பல்வேறு மாற்றங்களை இலக்கியங்கள் பெற்று வந்தாலும், அடிப்படையில் நிலம் சார்ந்த இலக்கியங்களுக்கு தனி இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. அதுதான் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை திணைகளாக பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பல இலக்கியங்கள் உருவாகி இருக்கிறது.
அந்த வகையில் நம்முடைய கரிசல் மண்ணில் உருவாகி இருக்கக்கூடிய இலக்கிய மரபை, பாரதி தொடங்கி இன்று வரை கொண்டாடி வருகிறோம். கரிசல் மண்ணில் இலக்கியம் மட்டுமல்ல ஓவியம், தொல்லியல், செப்பேடு, வேளாண் கருவிகள், தொழில் வளர்ச்சி என அனைத்துமே உள்ளது. இன்று உள்நாட்டு உற்பத்தி, வெளிநாட்டு முதலீடுகள் பற்றி பேசி வருகையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே பட்டாசு, தீப்பட்டி, அச்சு என தொழில்களை உருவாக்கி வெற்றி கண்டது கரிசல் பூமி. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து கரிசல் கதைகள், கரிசல் கவிதைகள், கரிசல் சொலவடைகள், விடுகதைகள் நாட்டார் கதைகள் ஆகிய நுால்கள் வெளியிடப்பட்டது.
கரிசல் இலக்கிய திருவிழாவில் முதல் நாள் அமர்வில் கரிசல் இலக்கியம், இரண்டாம் நாள் தற்கால இலக்கியம் குறித்த நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கரிசல் இலக்கியம், ஓவியம், இசை, தொழில் சார்ந்த புகைப்பட கண்காட்சி இடம்பெற்றுள்ளது. இதில் கனிமொழி எம்.பி., காணொலி காட்சி வாயிலாக பேசினார். சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், சொ.தர்மன் உள்ளிட்ட கரிசல் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்று பேசினர்.