'ஏதோ எங்களால முடிஞ்சது...' *குடிமகன் கைங்கர்யத்தால் தி.மு.க., அதிர்ச்சி
'ஏதோ எங்களால முடிஞ்சது...' *குடிமகன் கைங்கர்யத்தால் தி.மு.க., அதிர்ச்சி
ADDED : மார் 06, 2025 10:59 PM

தஞ்சாவூர்:தஞ்சையில் டாஸ்மாக் கடை முன்பு, மும்மொழி கொள்கைக்கு எதிராக, தி.மு.க.,வினர் ஒட்டிய போஸ்டரில், மதுபான ஸ்டிக்கர்களை குடிமகன்கள் ஒட்டி சென்றுள்ளனர்.
மத்திய அரசின் மும்மொழியை கொள்கையை ஏற்க மாட்டோம் என, இயக்கம் நடத்தி வருகிறது தி.மு.க.,
இரு மொழி கொள்கையை வலியுறுத்தி தினந்தோறும் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், இரு மொழி கொள்கையை வலியுறுத்தியும், மும்மொழி கொள்கையை எதிர்த்தும் தமிழகம் முழுதும் போஸ்டர் ஒட்ட கட்சியீனரை வலியுறுத்தி உள்ளார்.
இதையடுத்து, தமிழகம் முழுதும் தி.மு.க.,வினர் மும்மொழி கொள்கைக்கு எதிராக போஸ்டர் ஒட்டி உள்ளனர்.
அப்படி ஒட்டப்படும் போஸ்டர்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களாக பார்த்து ஒட்ட வேண்டும் எனவும் கட்சித் தலைமையால் அறிவுறுத்தப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, பஸ்டாண்ட், கோவில், ரயில் நிலையம், சந்தை, தியேட்டர், பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த வகையில், தஞ்சையில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றின் வாசலில் லோக்கல் கட்சிக்காரர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
ஸ்டாலின் படத்துடன் இருக்கும் அந்த போஸ்டரை பார்க்கும் குடிமகன் கள், போஸ்டர் முழுதும் மதுபான ஸ்டிக்கடர்களை ஒட்டியுள்ளனர்.
இதை கண்டு ஆவேசமடைந்த தி.மு.க., பிரமுகர் ஒருவர், போஸ்டரில் ஸ்டிக்கர் ஒட்டிய குடிமகன் ஒருவரிடம், இது குறித்துக் கேட்க, 'ஏதோ எங்களால முடிஞ்ச உதவி' எனச் சொல்ல, விரக்தியில் அங்கிருந்து நகர்ந்தார்.