ADDED : ஜூன் 10, 2024 11:57 PM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடக்க உள்ளதால் ஜூன் 15ல் கோயில் நடை அடைக்கப்படும் என கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.
இக்கோயிலின் தல வரலாறு குறித்து பக்தர்களுக்கு விளக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு ஜூன் 14 ல் ராமலிங்க பிரதிஷ்டை விழா துவங்குகிறது.
ஜூன் 15ல் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் கோயிலில் இருந்து புறப்பாடாகி கோதண்ட ராமர் கோயிலுக்கு சென்று திரும்புவதால் அன்று அதிகாலை 3:00 மணி முதல் 3 :30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடக்கும்.
இதனை தொடர்ந்து கால, சாயரட்ச பூஜைகள் முடிந்தவுடன் காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கோயில் நடை அடைக்கப்படும். மாலை 5:00 மணிக்கு சுவாமி திரும்பியதும் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என இணை ஆணையர் தெரிவித்தார்.

