ADDED : ஆக 22, 2024 02:08 AM
சென்னை:ரயில்வே திட்டங்களுக்கு தலா 1,000 ரூபாய் ஒதுக்குவது ஏன் என்பது குறித்து, ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி என்பது குறித்த பட்டியலை, 'பிங்க்' புத்தகத்தில், ரயில்வே வாரியம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீபெரும்புதுார் - இருங்காட்டுக்கோட்டை - கூடுவாஞ்சேரி, திண்டிவனம் - திருவண்ணாமலை, அத்திப்பட்டு - புத்துார், ஈரோடு - பழனி, சென்னை - கடலுார் - புதுச்சேரி உள்ளிட்ட புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு தலா 1,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இது பயணியர் மத்தியில், ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்வேயில் பல்வேறு திட்டங்களுக்கு தலா, 1,000 ரூபாய் ஒதுக்குவது என்பது புதியது அல்ல. தமிழகம் மட்டுமல்ல, கர்நாடகா, உத்தர பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, பீஹார் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், சில திட்டங்களுக்கு தலா, 1,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் முடக்கப்படவும் இல்லை; முழுமையாக கைவிடப்படவும் இல்லை.
அடுத்த பட்ஜெட்டுக்கு கொண்டு செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் தான் இந்த தொகை ஒதுக்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 1,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்ட சில திட்டங்களுக்கு, இந்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கி, செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
எனவே, அடுத்தடுத்து வரும் பட்ஜெட்டில், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவதற்கான, 'அட்வான்ஸ்' தான் அந்த 1,000 ரூபாய்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.