ADDED : ஆக 16, 2024 08:37 PM
சென்னை:''வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது தான் நம் இலக்கு,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், அவர் பேசியதாவது:
லோக்சபா தேர்தல் வெற்றி சாதாரணமானதல்ல; சாதாரணமாகவும் கிடைத்து விடவில்லை. 2019 தேர்தலில், 40க்கு 39 தொகுதிகளை பெற்றோம். இப்போது, 40க்கு 40 பெற்றோம். இரண்டு தேர்தலில் முழுமையான வெற்றியை இதுவரை யாரும் பெற்றது இல்லை; நாமும் இதற்கு முன் பெற்றதும் இல்லை. இந்த வெற்றிக்கு உங்களது உழைப்பு, செயல்பாடு மிக மிக அடிப்படையாக அமைந்திருந்தது என்பதில், எந்த சந்தேகமும் இல்லை.
லோக்சபா தேர்தல் வெற்றியை ஆவணப்படுத்தி, 'தென் திசையின் தீர்ப்பு' என்ற நுாலை உருவாக்கி வழங்கியிருக்கிறேன். நம் உழைப்பையும், வெற்றியையும் பதிவு செய்யும் ஆவணங்கள் அதிகம் இல்லை. அதனால் தான், நம் எல்லா செயல்பாடுகளையும் இந்த நுாலில் தொகுத்து வழங்கி இருக்கிறேன். மாவட்டங்களில் இயங்கும் கட்சி சார்ந்த நுாலகங்களிலும், பொது நுாலகங்களிலும் இந்த புத்தகத்தை சேர்க்க வேண்டும்.
கடந்த 2019 லோக்சபா தேர்தல் முதல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரை, மக்கள் மன்றத்தில் வென்றிருக்கிறோம். சுணக்கமில்லாமல் செயல்பட்டால், அடுத்த முறையும் தி.மு.க., ஆட்சி என்பதில் சந்தேகமில்லை. அதற்கு தயாராகும் வகையில், நாம் களப்பணிகளை துவக்க வேண்டும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேர்தலை மனதில் வைத்தே செயல்பட வேண்டும். விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் அதே வேளையில், நம் சாதனைகளையும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும். வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், நம் இலக்கு 200 தொகுதிகள் என, நான் சும்மா ஏதோ மேடைப் பேச்சுக்காக, குறிப்பிடவில்லை.
அந்த அளவுக்கு நலத்திட்ட பணிகளை செய்திருக்கிறோம். மக்களிடம் நற்பெயரை வாங்கியிருக்கிறோம். தமிழகத்தில் எந்த ஒரு வீட்டை எடுத்துக் கொண்டாலும், அந்த வீட்டில் ஒருவராவது பயனடையும் வகையில் தான் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மக்களை சென்று சேர்ந்திருக்கும் நலத்திட்டங்கள் எல்லாம் ஓட்டுக்களாக மாற வேண்டும் என்றால், அதற்கு நம் களப்பணி மிக மிக அவசியம். அதற்கு இப்போதே நாம் உழைக்க வேண்டும்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக, வரும் 27-ம் தேதி இரவு அமெரிக்கா புறப்படுகிறேன். முப்பெரும் விழாவிற்கான பணிகளை செய்து முடிக்க வேண்டும். நான் இப்போது சொல்லியிருக்கும் பணிகளையும் செய்ய துவங்கியிருக்க வேண்டும். நான் அமெரிக்காவில் இருந்தாலும், தலைமை நிலையம் வாயிலாக, இதையெல்லாம் கவனித்துக் கொண்டு தான் இருப்பேன்.
கருணாநிதி உருவம் பொறித்த நுாறு ரூபாய் நாணயம் வெளியிடப்பட இருக்கிறது. கட்சி துவங்கி, 75 ஆண்டுகள் ஆகி விட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக, ஒரு மாநிலக் கட்சி ஆட்சியை பிடித்த வரலாறு தமிழகத்திற்கு தான் சொந்தம். அந்த வரலாற்றையும் எழுதியது நாம் தான்.
இந்த கட்சியின் தேவை, இன்னும் நுாறு ஆண்டுகளுக்கு இருக்கிறது. ஆலமரமாக இந்த கட்சி வேரூன்றி நிற்கிறது என்றால், அதற்கு காரணம், கோடிக்கணக்கானவர்களின் உழைப்பும், தியாகமும் உரமாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கட்சியை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய வரலாற்று கடமையும், நம் கைகளில் இருக்கிறது. அதற்கான உழைப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
***

