ம.பி.,க்கு ரூ.25 கோடி; தமிழகத்திற்கு ரூ.10 கோடி மத்திய அரசு மீது அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு
ம.பி.,க்கு ரூ.25 கோடி; தமிழகத்திற்கு ரூ.10 கோடி மத்திய அரசு மீது அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 28, 2024 02:41 AM
சென்னை:''கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை நடத்த மத்திய பிரதேசத்திற்கு, 25 கோடி ரூபாயை வழங்கிய மத்திய அரசு, தமிழகத்திற்கு, 10 கோடி ரூபாயை மட்டுமே வழங்கியது,'' என, அமைச்சர் உதயநிதி கூறினார்.
ஊக்கத்தொகை
சட்டசபையில் அவரது பதிலுரை:
தமிழக விளையாட்டு வீரர்களுக்கு உதவ, சாம்பியன்ஸ் அறக்கட்டளை துவங்கப்பட்ட ஒரே ஆண்டில், 375 வீரர்களுக்கு, 8.62 கோடி ரூபாய் நிதியுதவியாகவும், ஊக்கத்தொகையாகவும் வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் முதல் முறையாக, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள், கடந்தாண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டன. சிறப்பான கேலோ இந்தியா விளையாட்டு நிகழ்ச்சியை நான் எங்குமே பார்த்ததில்லை என, பிரதமர் பாராட்டினார்.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை நடத்த கடந்தாண்டு, மத்திய பிரதேசத்திற்கு, 25 கோடி ரூபாயை வழங்கிய மத்திய அரசு, தமிழகத்தில் போட்டி நடத்த, 10 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியது.
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில், கூடுதல் விளையாட்டுகளை சேர்க்க வேண்டும் என, எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சுய உதவி குழு கடன்
இதை ஏற்று, புதிய விளையாட்டுகள் நடப்பாண்டு சேர்க்கப்பட உள்ளன. விளையாட்டு அரங்கங்கள் இல்லாத சட்டசபை தொகுதிகளில், மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என, அறிவித்திருந்தோம்.அதன்படி, ஒன்பது சட்டசபை தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் அவை பயன்பாட்டுக்கு வரும்.
சென்னையை அடுத்து கோவையில், பன்னாட்டு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
மைதானம் அமைக்கும் இடத்தை தேர்வு செய்யும் பணியை இரண்டு வாரங்களுக்கு முன் துவங்கியுள்ளோம். நடப்பு ஆண்டில் பணிகள் துவங்கப்படும்.
சுயஉதவி குழுக்களின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காக, 2021 முதல் இதுவரை 80,000 936 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டு உள்ளது.
கடந்தாண்டு மட்டும், 4.79 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு. 30,075 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டது. நடப்பாண்டு, 35,000 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி பேசினார்.

