ADDED : மே 13, 2024 07:10 AM

கடலுார் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழக பஸ், சென்னையில் இருந்து பயணியரை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி வழியாக காரைக்கால் நோக்கி சென்றது.
திருவாரூர் மாவட்டம், பூங்காவூரை சேர்ந்த தனசேகரன், 47, பஸ்சை ஓட்டினார். நாகை மாவட்டம், கோடிமங்கலத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார், 40, கண்டக்டராக இருந்தார்.
நள்ளிரவு, 2:00 மணிக்கு கடலுார் அடுத்த ரெட்டிச்சாவடி, கரிக்கன் நகர், மலட்டாறு பாலம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், நெடுஞ்சாலை மீடியனில் மோதி நின்றது. அப்போது, அரசு பஸ்சை பின் தொடர்ந்து வந்த வி.பி.எம்., என்ற ஆம்னி பஸ், விபத்துக்குள்ளாகி நின்ற அரசு பஸ் மீது வேகமாக மோதியது.
விபத்தில் சிக்கிய பயணியர் சத்தம் போட்டனர். அந்த வழியாக சென்றவர்கள் தகவலில் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் சிக்கிய பயணியரை மீட்டனர்.
விபத்தில், கண்டக்டர் சுரேஷ்குமார், டிரைவர் தனசேகரன் உட்பட 29 பேர் படுகாயமடைந்தனர். இதில், 24 பேர் கடலுார் அரசு மருத்துவமனையிலும், 5 பேர் புதுச்சேரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். விபத்தால், கடலுார் - புதுச்சேரி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.