ரூ.38.81 லட்சம் நிதி முறைகேடு தபால் துறை பெண் ஊழியருக்கு சிறை
ரூ.38.81 லட்சம் நிதி முறைகேடு தபால் துறை பெண் ஊழியருக்கு சிறை
ADDED : ஜூன் 29, 2024 12:27 AM
சென்னை:தொடர் வைப்பு நிதி முறைகேடு புகாரில், தபால் துறை முன்னாள் பெண் ஊழியருக்கு, இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், பெரிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் வி.சி.தனலட்சுமி, 55. இவர், காஞ்சிபுரம் தலைமை தபால் அலுவலகத்தில், உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2007 ஏப்., 12 முதல் 2011 ஏப்., 29 வரை, திருவாலங்காடு தபால் நிலையத்தில் பணிபுரிந்தபோது, ஆர்.டி., எனும் தொடர் வைப்பு நிதியை முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து, சி.பி.ஐ. நடத்திய விசாரணையில், திருவாலாங்காடு தபால் நிலையத்தில் தொடர் வைப்பு நிதி செலுத்திய 191 பேரின் கணக்கை முழுமையாகவும், பகுதியாகவும் முடித்து, 38 லட்சத்து 81,450 ரூபாய் முறைகேடு செய்ததும், கணக்கு வைத்திருந்த நபர்களின் கையெழுத்து, கைரேகையை மோசடியாக போட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர் மீது நம்பிக்கை மோசடி, ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின்கீழ், சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. கடந்த 2017 ஜூன் 6ல் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணை, சென்னை சி.பி.ஐ., நீதிமன்ற நீதிபதி டி.மலர் வாலன்டினா முன் நடந்தது.
விசாரணை முடிந்து, குற்றச்சாட்டுக்கான தண்டனை குறித்து தனலட்சுமியிடம் நீதிபதி கேள்வி எழுப்பியபோது, 'முறைகேடு செய்த பணத்தை திரும்ப செலுத்தி விட்டேன். குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்' என்றார்.
பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
குற்றம்சாட்டப்பட்ட தனலட்சுமி 38 லட்சத்து81,450 ரூபாயை முறைகேடு செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அந்த பணத்தை அரசு கணக்கில் திரும்ப செலுத்தியும் உள்ளார்.
முறைகேடு செய்த பணத்துக்கான சாதாரணவட்டி மற்றும் அபராத வட்டி 16 லட்சத்து, 50,932 என கணக்கிடப்பட்டுள்ளது.
இதில், 50,000த்தை மட்டும் அவர் செலுத்தி உள்ளார். முறைகேடு செய்த பணம் பொது பணம். அதாவது அரசு கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளதால், அவர் மீது எந்த கருணையும் காட்ட முடியாது.
எனவே, தனலட்சுமி மீதான ஐந்து சட்டப் பிரிவுகளுக்கும் தனித்தனியாக இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், மொத்தம் 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

